முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு விண்ணப்பங்கள் தாமதமாக விநியோகம்
சென்னை: சென்னையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு விண்ணப்பங்கள் இன்று மிகவும் தாமதமாக வழங்கப்பட்ட காரணத்தினால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவெடுத்துள்ள நிலையில், அதற்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் இன்று நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விநியோகம் செய்யப்பட இருந்தன.
ஆனால், மதிய நேரமாகியும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அங்கு கூடியிருந்த 300க்கும் மேற்பட்டோர் அதிருப்தியில் ஆழ்ந்தனர். அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. காத்திருந்தவர்கள் அங்குள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு ஒருவழியாக காலை 10 மணிக்கு வழங்கப்பட வேண்டிய விண்ணப்பங்கள், மதியம் 12 மணிக்கு மேலாக தாமதமாக வழங்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.