போலீசை கண்டித்து இந்து முன்னணியினர் திடீர் ஆர்ப்பாட்டம்
நெல்லை: நெல்லை அருகே சாலை ஓரம் அமைக்கப்பட்டிருந்த கொடிகளை அகற்றியதால் அவர்களை கண்டித்து இந்து முன்னணி தொண்டர்கள் திடீர் சாலை மறியலில் குதித்தனர்.
நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் தவ்ஹித் ஜமாத் சார்பில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடக்க உள்ளது. இதன் பொருட்டு அந்த அமைப்பு சார்பில் கொடிகள் வரையப்பட்டுள்ளன.
இந்நிலையில் வண்ணார்பேட்டையில் இந்து முன்னனியினர் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்காக இந்து முன்னணியினர் சார்பில் சாலையில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
இந்த கொடிகளை போலீசார் இரவில் அகற்றினர். இதை கண்டித்து இந்து முன்னணியினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாநில துணை தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நெல்லை-திருவனந்தபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அகற்றப்பட்ட கொடிகளை அதே பகுதியில் வைப்பதாக அவர் தெரிவித்ததால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில துணை தலைவர ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, முன்னனி மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட தலைவர் பாலாஜி கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வேல் ஆறுமுகம் வரவேற்றார். இந்து முன்னணி கொடி இரவோடு இரவாக அகற்றப்பட்டு மீண்டும் வைக்கப்பட்ட சம்பவத்தால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications