"கிஸ் கிஸ்" போராட்டத்திற்கு இந்து முன்னணியின் பதிலடி "தூ... தூ"...!
சென்னை: சென்னை ஐஐடி மாணவர்கள் நடத்திய முத்தப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி அமைப்பினர் திங்கள்கிழமை ஐஐடி நுழைவு வாயில் முன்பு எச்சில் துப்பி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் கொச்சியில் நவம்பர் 2ஆம் தேதி கிஸ் ஆப் லப் என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி முத்தங்களை பரிமாறிக்கொண்டனர். இதனை கண்டித்து கேரள மாநில பாஜக மற்றும் சில அமைப்புகள் அவர்களை விரட்டி அடித்தனர்.

கேரள மாநிலத்தில் முத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை ஐஐடி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்.
இதனை கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில், சென்னை ஐஐடி நுழைவு வாயிலில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ஐஐடி நுழைவு வாயில் முன்பு எச்சிலை துப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இந்த முத்தங்களை பரிமாறிக்கொள்வது தமிழக பண்பாட்டுக்கும், கலாச்சாரத்திற்கும் எதிரானது. இதுபோன்று பொது இடங்களில் மாணவ மாணவிகள் முத்தங்களை பரிமாறிக்கொள்வது, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது, என்று தெரிவித்தனர்.
காவல்துறையிடம் அனுமதி பெறாமல் இந்த போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மாணவ மாணவிகள் முத்தங்களை பரிமாறிக்கொள்வதற்கு ஐஐடி நிர்வாகம் எப்படி அனுமதி கொடுத்தது. சென்னை காவல்துறையினர் எப்படி அனுமதி வழங்கினர். இதுபோன்று தமிழகத்தில் எங்கும் இனி நடைபெறக் கூடாது என்றும், அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.












Click it and Unblock the Notifications