ஆர்ப்பரித்து கொட்டும் நீர்.. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு.. சுற்றுலா பயணிகளுக்கு தடை!
சென்னை: கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து 60,000 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 34,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்புக் கருதி அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.

தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. நீர்வரத்து அதிகரித்து இரு அணைகளும் 90 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 61,000 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுவை கடந்து ஒகேனக்கல்லில் வெள்ளமாக சீறிப் பாய்கிறது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் இந்த இரண்டு அணைகளிலிருந்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 60,000 கன அடி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், பரிசல்கள் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையை வருவாய்த் துறையினர் பூட்டி உள்ளனர். மேலும், கரையோரப் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications