கனமழை எச்சரிக்கை! மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. ஆட்சியர்கள் அறிவிப்பு
மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. பருவமழை கொஞ்சம் தாமதமாக தொடங்கியநிலையில், ஆரம்பத்தில் குறைவான மழையே பெய்தது. எனினும் கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.
இதேபோல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
இதேபோல் நாளை, திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்த எச்சரிக்கையில் கூறியிருந்தது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார். இதேபோல் கனமழை காரணமாக கடலூரிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications