திருவாரூர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி.. தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை.. என்ன மேட்டர்?
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள், சிறப்பு தினங்களின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, மற்றொரு நாளில் வேலை நாளாக ஈடுகட்டப்படும். அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 24) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்காவில் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழாவிற்காக நவம்பர் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கல்வி, அரசு நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜம்புவான் ஓடை தர்காவில் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 14 நாட்கள் நடைபெறும் இந்த கந்தூரி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை காண்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா நவம்பர் 24ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தருவார்கள் என்பதால் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை அன்றும் (நவம்பர் 25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் நடைபெறுவதை ஒட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பள்ளிகள் விடுமுறை என்பதால் திருவாரூர் மாவட்டத்துக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications