புனித ரமலான் மாதம்! அதிமுக சார்பில் 'இஃப்தார் விருந்து'! ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் நடைபெற்று வருவதால், அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தவுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதா இருந்தவரை இந்த விழாவை மிக பிரம்மாண்டமாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தி வந்தார்.

அதிமுக சார்பில் நடத்தப்படும் இஃப்தார் விழாவில் இஸ்லாமிய சமுதாய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என பலருக்கு அழைப்பிதழ் அனுப்பி அவர்களை பங்கேற்க வைப்பார் ஜெயலலிதா.
அவரது மறைவுக்கு பிறகு இஃப்தார் விழாவை மிகவும் எளிமையாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்தாண்டு நடைபெறும் இஃப்தார் விழா குறித்து அதிமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் இவ்வாண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி, வருகின்ற 16.4.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை - 5 மணியளவில், சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இஃப்தார் விருந்து வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications