குதிரை பந்தயத்துக்கு தடை கோரிய மனு... தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
சென்னை: குதிரை பந்தயத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மனுதாரர் திடீரென திரும்பப் பெறுவதாக அறிவித்ததால், அதைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காளைகள் துன்புறுத்தப்படுவதாக ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பந்தயத்தில் கலந்து கொள்வதால் குதிரைகள் துன்புறுத்தப்படுவதாக சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த சக்திவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘குதிரை பந்தயத்தினால் ஒரு புறம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதேநேரம், குதிரைகள் துன்புறுத்தப்படுகிறது. குதிரைகளை கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் சவாரிக்காக பயன்படுத்தப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல், திருமண நிகழ்ச்சியில் மணமகனை அழைத்து செல்ல குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்போது அதிக ஒலியுடன் இசை கருவிகள் இசைக்கப்படுகிறது. பட்டாசும் வெடிக்கப்படுகிறது. இவ்வாறு பல வழிகளில் குதிரைகளுக்கு இன்னல் விளைவிக்கின்றனர்.
அதேபோல அரசியல் கட்சி நிகழ்ச்சிகளிலும் குதிரைகளை பயன்படுத்துகின்றனர். விலங்குகளை கொடுமை செய்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மிருக வதை தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த 4-ந் தேதி விலங்குகள் நலவாரியத்துக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, பந்தயத்தில் குதிரைகளை பயன்படுத்தவும், கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் சவாரிக்கு குதிரைகளை பயன்படுத்தவும், திருமணம் மற்றும் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு குதிரைகளை பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று விலங்கு நலவாரியத்துக்கு உத்தரவிடவேண்டும்''என அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மனுவை திரும்பப்பெற அனுமதித்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications