ஒரே நேரத்தில் பிறந்த 3 குழந்தைகள் - ஆணுக்குப் பதில் பெண் குழந்தையை மாற்றிக் கொடுத்த மருத்துவமனை
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ஒரே நேரத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் 3 குழந்தைகள் பிறந்த நிலையில் தம்பதிகளில் ஒருவருக்கு ஆண் குழந்தையைக் காமித்து விட்டு பெண் குழந்தையைக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
கல்பாக்கம் அடுத்துள்ள பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பானுமதி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 29 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் இரவு 8 மணியளவில் அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அதே பிரசவ வார்டில் ரேவதி, தாட்சாயணி ஆகியோரும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 3 பேருக்கும் இரவு 11 மணி முதல் 11.45 மணிக்குள் குழந்தைகள் பிறந்தன. 2 பேருக்கு ஆண் குழந்தையும் ஒருவருக்கு பெண் குழந்தையும் பிறந்தன.
இதில் பானுமதி சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக டாக்டர்கள் காண்பித்தனர். பின்னர் 3 குழந்தைகளுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் இங்குபேட்டரில் வைக்கப்பட்டன. நேற்று மதியம் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் சரியானதால் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அப்போது பானுமதியிடம் பெண் குழந்தை கொடுக்கப்பட்டது. குழந்தையை பார்த்ததும் பானுமதி அதிர்ச்சி அடைந்தார். முதலில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக காட்டி விட்டு இப்போது பெண் குழந்தையை கொடுத்ததால் அவர் வாங்க மறுத்தார்.
இதையடுத்து பானுமதியும், அவரது கணவர் ஆனந்தனும் மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துராஜ், மருத்துவ கல்லூரி அதிகாரி கண்ணன் ஐசக் ஆகியோரிடம் புகார் செய்தனர். புகாரில், தனக்கு குழந்தை பிறந்ததும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக காட்டினார்கள். எனது கையிலும் குழந்தையின் கையிலும் 31 ஆம் எண் கட்டப்பட்டிருந்தது. எனது மருத்துவ சீட்டிலும் ஆண் குழந்தை என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஆண் குழந்தைக்கு பதில் பெண் குழந்தையை கொடுக்கிறார்கள் என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து குழந்தை மாறியதாக தகவல் பரவியதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு மருத்துவ கல்வி அதிகாரி கீதாலட்சுமி உத்தரவின் பேரில் துணை மருத்துவ கல்வி இயக்குனர் லூத்ரவி செல்லையா நேற்று இரவு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். மருத்துவ கல்லூரி முதல்வர் அறைக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் உதவியாளர்களை அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் பெற்றோரையும் அழைத்து விசாரித்தார்.
குழந்தை மாறியது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் கேட்டறிந்தார். இதையடுத்து 3 குழந்தைகளுக்கான தாயை கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. டி.என்.ஏ. பரிசோதனை செய்வதற்காக ஹைதராபாத்தில் இருந்து மருத்துவ குழுவினர் இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்கள் 3 குழந்தைகளுக்கும், 3 தாய்களுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி எந்த குழந்தை யாருடையது என்பதை கண்டறிய உள்ளனர். அதன் அடிப்படையில் குழந்தையை தாயிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications