ஓ.. இப்படித்தான் ரத்தம் எடுத்தாங்களாம்...!
சென்னை: சமீ்பத்தில் கின்னஸ் சாதனைக்காக அதிமுக சார்பில் நடத்தப்பட்ட தமிழகம் தழுவிய ரத்த தான முகாமின்போது பலரிடமும் கட்டாயப்படுத்தி ரத்தம் பெறப்பட்டதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
உடல் நலம் சரியில்லாதவர்களிடமும் கூட கட்டாயப்படுத்தி, ரத்தத்தை எடுத்து விட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன. இப்படி மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் எடுக்கப்படுவதற்குப் பெயர்தான் ரத்த தானமா என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கேட்கின்றனர்.
பிப்ரவரி 14ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத் துறை ஏற்பாடு செய்திருந்த ரத்த தான முகாமில்தான் இந்தக் கூத்துக்கள் நடந்துள்ளனவாம்.

அடுத்தவன் ரத்தமா கிடைத்தது உங்களுக்கு
ரத்ததானம் என்றால் விரும்பிக் கொடுப்பதற்குப் பெயர்தான் தானம். ஆனால் இவர்கள் கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் ரத்தம் எடுத்துள்ளனர். இப்படித்தான் அடுத்தவர் ரத்தத்தை பறித்துப் பெருமை தேடிக் கொள்வதா என்று பலரும் குமுறல் வளியிட்டுள்ளனர்.

ரத்த தானத்தை கேலி செய்து விட்டனர்
இவர்களின் செயல்பாட்டைப் பார்க்கும்போது ரத்ததானத்தின் மகத்துவமும், உன்னதமும் கேலிக்கூத்தாகி விட்டது என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

கால் ஒடிஞ்சா என்ன ரத்தத்தை எடு...
சேலத்தில் ரத்த தானத்திற்காக எங்கிருந்தோ கூட்டி வரப்பட்டவர்களிடையே நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஒரு டிரைவரின் கால் அடிபட்டு ரத்தம் கொட்டியுள்ளது. ஆனால் அதைக் கூட பொருட்படுத்தாமல், அவரைப் படுக்க வைத்து ரத்தத்தை எடுத்துள்ளனராம்.

ஜூஸ் தரவில்லை
ரத்த தானம் செய்வோருக்கு, ரத்தம் கொடுத்து முடித்தவுடன் ஜூஸ் அல்லது பிஸ்கட் தருவது வழக்கம். ஆனால் இங்கோ யாருக்குமே எதுவுமே தரப்படவில்லையாம்.

மாத்தி யோசித்த பாலாஜி
உண்மையில் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த ரத்த தான முகாமைப் பார்த்து மற்ற அமைச்சர்கள் பெரும் பொறாமையுடன் இருந்தார்களாம். காரணம், தங்களை விட மிகச் சிறந்த ஸ்டண்ட்டை பாலாஜி அடித்து விட்டார் என்ற டென்ஷன்தான்.

எப்படியெல்லாம் கூட்டம்...
இந்த ரத்த தான முகாமை பெரும் பரபபரப்பாக்க முடிவெடுத் செந்தில் பாலாஜி, இதற்கு ஆள் சேர்க்க எடுத்த நடவடிக்கைதான் ஆச்சரியகரமானது. அதாவது டிரைவிங் லைசென்ஸ் கேட்டு ஆர்டிஓ வருவோர், டிரைவிங் பள்ளிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என வளைத்து வளைத்து ஆட்களைச் சேர்த்துள்ளனர்.

ரத்தம் கொடுத்துட்டு படம் ஓ.கே.
மதுரையிலோ ரத்த தான முகாம் நடந்த தமுக்கம் மைதானத்தில் கல்லூரி மாணவர்கள் பெரும் கூட்டமாக வந்திருந்தனர், அதை விட ஆட்டம் பாட்டம் அமர்க்களப்படுத்தியது. அதாவது இங்கு ரத்தம் கொடுத்து விட்டு, அவர்கள் தரும் பணத்தை வைத்து படம் பார்க்கப் போகும் ஆர்வமாம் இது...
அடுத்த பிறந்த நாளுக்கு கண் தான முகாம் நடத்துவாங்களோ.. நெனக்கவே பயந்து வருதே..!












Click it and Unblock the Notifications