வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட அணியில் எப்படி சேருவது?... பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: தேமுதிக மற்றும் வைகோவை ஒருங்கிணைப்பாளராக கொண்ட மக்கள் நலக் கூட்டணியுடன் தமாகா கூட்டணி வைத்தது ஏற்புடையதாக இல்லை என்று பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
தமாகாவின் கடைசி நேர கூட்டணியால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதில் பீ்ட்டர் அப்லோன்ஸ் முக்கியமானவர். ஜி.கே.மூப்பனாரின் தீவிர சிஷ்யர்களில் முக்கியமானவர் பீட்டர். இதன் காரணமாகவே ஜி.கே.வாசன் போகும் பாதையில் இவரும் கூடவே போய் வந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது தமாகாவிலிருந்து காங்கிரஸுக்கு மீண்டும் திரும்ப முடிவு செய்துள்ளார் பீட்டர் அல்போன்ஸ். தனது முடிவு குறித்து அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஏற்புடையது அல்ல
சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் உள்ள தேமுதிகவிடமும், வைகோவை ஒருங்கிணைப்பாளராக கொண்டு செயல்படும் மக்கள் நலக் கூட்டணியுடனும் உடன்பாடு வைத்துக் கொண்டு தேர்தலை சந்திப்பது ஏற்படையதாக இல்லை.

எங்கள் பார்வை வேறு
என்னைப் பொறுத்தவரை தமாகா என்ற பேரியக்கம், தேசிய பார்வை கொண்ட மாநிலக் கட்சியாகவும் நாங்கள் மேற்கொண்ட இரண்டாவது பரிசோதனையின் மூலம் உருவான இயக்கம். முன்பொருமுறை தலைவர் மூப்பனார் தலைமையில், தேசிய பார்வை கொண்ட மாநிலக் கட்சியை உருவாக்க வேண்டும் என கட்சியைத் தொடங்கினோம். பல காரணங்களால் அது வெற்றியடையாமல் போகவே, அகில இந்திய காங்கிரஸில் இணைந்தோம். இரண்டாவது முயற்சியாக, வாசன் வேண்டுகோளுக்கிணங்க புதிய கட்சியைத் தொடங்கினோம்.

விஜயகாந்த்தை முதல்வராக ஏற்பதா?
இந்தப் புதிய கட்சி, மாற்றத்திற்கான முன்னெடுப்பு என அறிவிக்கப்பட்டது. தலைவர் ஜி.கே.வாசனை முதல்வர் என்றுதான் தமாகா தொண்டர்கள் முழக்கம் எழுப்பி வந்தார்கள். ஆனால், விஜயகாந்தை முதல்வர் என வாசன் ஏற்றுக் கொண்டது எனக்கு நெருடலாக இருந்தது. முதல்வர் பதவி என்பது தூரமான கனவாகக் கூட இருக்கலாம்.

ஆதாயம் இருக்க வேண்டாமா?
ஆனால், நாம் முன்வைக்கும் கூட்டணி மூன்று விதமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். ஒன்று த.மா.காவுக்கு அரசியல் ஆதாயம் தருவதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கு உகந்ததாகவும். த.மா.கா எதற்காக தோற்றுவிக்கப்பட்டதோ, எதிர்காலத்தில் அந்தப் பாதையை செழுமைப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அந்தப் பாதையில் இருந்து விலகுவதை நான் ஏற்கவில்லை.

தளம் முக்கியம்
நான் நினைத்த மெகா கூட்டணி என்பது வாசன் தலைமையில் அமைந்திருக்க வேண்டியது. தளம் மிக முக்கியமானது. இந்தக் கூட்டணி விஜயகாந்த் தலைமையில், வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டிருக்கச் கூடிய கூட்டணி.

வைகோவின் கொள்கையில் உடன்பாடு இல்லை
வைகோவின் குடும்பம் எங்கள் மாவட்டத்தில் மிகப் பெரிய குடும்பம். நானும் அவரும் ஒரே தாலுகாவைச் சேர்ந்தவர்கள். ஒரே கல்லூரியின் முன்னாள் மாணாக்கர்கள். அவருடைய பேச்சாற்றல், எழுத்தாற்றலை மிக அதிகமாக மதிப்பவன். அவரிடம், எனக்கு உடன்பட முடியாத ஒன்று. விடுதலைப் புலிகளின் ஆதரவு. ராஜீவ்காந்தி கொலை வழக்கைத் தொடர்ந்து, அவருடைய பேச்சுக்கள், நடவடிக்கைகளில் இன்றுவரையில் எனக்கு மாறுபாடு உண்டு. தனிநபராக அவரை மதிக்கிறேன். அவரது கொள்கையில் உடன்பாடு இல்லை.

தரம் தாழ்ந்து பேசுகிறார்
அதைவிட முக்கியம், தலைவர்களை தரம்தாழ்ந்து விமர்ச்சிப்பது. நாளைக்கு சோனியா காந்தியை, ராகுலை, திமுக தலைவர் கருணாநிதியை, ஸ்டாலினை விமர்சிக்கிறார் என்றால், அதே மேடையில், சாட்சியாக அமர்ந்து கொண்டு நான் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா?

என்ன செய்யப் போகிறார் வாசன்?
மூப்பனாரிடமிருந்து நிறையக் கற்றுள்ளார் வாசன். ஆனால் இன்னும் நிறைய கற்க வேண்டியுள்ளது. அகில இந்திய அளவில் காங்கிரஸ்தான் தனது தலைமை என்று கூறுவார் மூப்பனார். வாசனிடம் என்ன கருத்து உள்ளது.? நாளை நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது பாஜக, காங்கிரஸ் என இரண்டே அணிகள்தான். யாரை ஆதரிப்பார் வாசன். அப்போது வாசன் என்ன நிலைப்பாடு எடுப்பார்? அதைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை இருந்தால்தானே கட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும்?

சோனியா, ராகுல் எனக்கு தீமை செய்யவில்லை
மூப்பனாரால் வளர்த்தெடுக்கப்பட்டவன் என்ற ஒரே காரணத்தால்தான், நான் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். சோனியாவும் ராகுலும் எனக்கு எந்த தீமையும் செய்யவில்லை. மூன்று முறை எம்.எல்.ஏவாகவும் ஒருமுறை நாடாளுமன்றத்திற்கும் அவர்களால்தான் நான் தேர்வு செய்யப்பட்டேன். தலைவர் மூப்பனார் என்னை அடையாளம் கண்டு வளர்த்தெடுத்தார்.

போட்டியிட மாட்டேன்
நான் ஆறு மாதத்திற்கு முன்பே ஜி.கே.வாசனிடம் சொல்லிவிட்டேன். 'இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்' என்று. தேர்தலை மனதில் கொண்டு இந்த முடிவை நான் எடுக்கவில்லை. போட்டியிடப் போவதும் இல்லை என்று கூறியுள்ளார் பீட்டர் அல்போன்ஸ்.












Click it and Unblock the Notifications