நீல பேண்ட்.. கள்ளக்குறிச்சியில் முக்கிய குற்றவாளியை தூக்கிய போலீஸ்.. சொந்த காசில் சூனியம்.. எப்படி?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை எஸ்ஐடி போலீசார் நேற்று இரவு கைது செய்து உள்ளனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பள்ளியின் வாசலில் நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்தது.
இது தொடர்பாக போலீசார் தரப்பு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இரண்டு விசாரணைகளும் மிக தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

கைது
இந்த கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு தொடர்பான 350 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 170 பேர் வரை ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இந்த போராட்டம் வாட்ஸ் ஆப் மூலம் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் 500 பேர் பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்களை தொடங்கி அதில் போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கப்பட்ட சில மணி நேரத்தில் போராட்டங்களை செய்ய முடிவு செய்துள்ளனர்.

கைது எப்படி?
வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் மற்றும் குழுக்கள் அடிப்படையில் இந்த கைதுகளை போலீசார் செய்து வருகின்றனர். அதேபோல் சிசிடிவி காட்சிகள், போராட்டம் நடத்த இடத்தில் மீடியா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ ஆகியவற்றை வைத்தும் போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை எஸ்ஐடி போலீசார் நேற்று இரவு கைது செய்து உள்ளனர். போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த நபரை எஸ்ஐடி தேடி வந்தது.

தீ
கருப்பு சட்டை, நீல பேண்ட் அணிந்து போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த ஒரு இளைஞரை போலீசார் தேடி வந்தனர். போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த, வெள்ளை சட்டை அணிந்த மணிகண்டன் என்ற இளைஞர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கருப்பு சட்டை அணிந்த முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட கலவரக்காரர்கள் போனை போலீசார் இதற்காக தீவிரமாக சோதனை செய்தனர்.

வீடியோ
கருப்பு சட்டை அணிந்து இருந்த அந்த நபரின் போன் எண் கலவரம் செய்த இளைஞர் ஒருவரின் போனில் இருந்துள்ளது. இருவரும் நண்பர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த வீடியோவை அந்த நபர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டோரியாக வைத்து இருந்ததும் அவரின் நண்பரின் வாட்ஸ் ஆப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை வைத்து போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தது நிதிஷ் என்ற இளைஞர்தான் என்று கண்டுபிடித்தனர். இதையடுத்து நேற்று இரவு நிதிஷை கைது செய்தனர்.
Recommended Video

சொந்த காசில் சூனியம்
நிதிஷ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். போராட்டத்தில் போலீஸ் வாகனம் உட்பட பல வாகனங்களுக்கு தீ வைத்துள்ளார். நேற்று கைது செய்யப்பட்ட இவர் தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தது ஏன்? இவருக்கு பின் இருந்தது யார்? என்று போலீசார் துருவி துருவி கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications