காத்திருந்தவர்கள் பலர்.. ஆனால் இளங்கோவன் உள்ளே வந்தது எப்படி?
சென்னை: ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் அதிரடி செயல்பாடுகள், துணிச்சலாக முடிவெடுப்பது, துணிந்து இறங்குவது உள்ளிட்ட அவரது குணங்கள்தான் அவருக்கு மீண்டும் தலைவர் பதவியைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் தமிழக காங்கிரஸை சீரமைக்க கட்சி மேலிடம் முடிவெடுத்தது. ஆனால் அதைச் செய்ய முடியாமல் தவித்து வந்தது. காரணம், தமிழக காங்கிரஸில் பெரும்பான்மையான குரூப்பாக இருந்த வாசன் குரூப்பைத் தாண்டி எதுவும் செய்ய முடியாத நிலை நிலவியதால்.
இதனால் தமிழக தலைவரை மாற்றாமல் விட்டு வைத்திருந்தனர். ஆனால் அவரை அவராகவே விலகிச் செல்ல என்னவெல்லாம் செய்ய வேண்டுமே அதைச் சத்தம் போடாமல் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் நினைத்தது நடந்தது, ஞானதேசிகன் விலகிக் கொண்டார். அடுத்த நாளே புதிய தலைவரைப் போட்டு விட்டனர்.

காத்திருந்த தலைவர்கள்
ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்க பல தலைவர்கள் காத்திருந்தனர், முயற்சித்தும் வந்தனர்.

நாச்சியப்பன் முதல் கார்த்தி சிதம்பரம் வரை
சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர், எச். வசந்தகுமார், கார்த்தி சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் தலைவர் பதவிக்காக காத்திருந்தனர். இவர்களில் இளங்கோவனும் கூட ஒருவர்.

ஏமாந்த தலைவர்கள்
ஆனால் இவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இளங்கோவனை தலைவராக்கி விட்டது காங்கிரஸ் மேலிடம்.

அதிருப்தியில் தலைவர்கள்
குறிப்பாக எச். வசந்தகுமார் பெரும் ஏமாற்றமடைந்தார். இவருக்குத்தான் பதவி கிடைக்கும் என்று காங்கிரஸில் பரவலாக எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல திருநாவுக்கரசரும் கூட எதிர்பார்ப்பில் இரு்நதார்.

ப.சிதம்பரத்திற்கு பேரதிர்ச்சி
அதை விட ப.சிதம்பரம்தான் பெரும் அதிர்ச்சி அடைந்தாராம். காரணம், இவர் தனக்கு அல்லது தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்குப் பதவி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தார். ஆனால் இளங்கோவனுக்குப் பதவி என்ற அறிவிப்பு வந்ததும் அதிர்ச்சியாகி விட்டாராம்.

ஆலோசனையே கேட்கவில்லையே
அதை விட முக்கியமாக முன்னாள் தலைவர்களான தங்கபாலு, கிருஷ்ணமூர்த்தி போன்றோர், வழக்கமாக புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக நடத்தப்படும் ஆலோசனையைக் கூட கட்சி மேலிடம் நடத்தவில்லையே என்று அதிருப்தியில் உள்ளனராம்.

ராகுல் விருப்பம்- சோனியா ஆலோசனை
ஆனால் தமிழகத்தில் அதிரடியான, தைரியமான, சுய அறிவுடன் முடிவெடுக்கக் கூடிய ஒருவரை தலைவராக நியமிக்கலாம் என்று ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்திருந்தாராம். இதையொட்டி சோனியாவும் ஆலோசனை நடத்தி வந்தாராம்.

இளங்கோவன்தான் சரியான சாய்ஸ்
இதையடுத்து இளங்கோவன் பெயரை பலர் பரிந்துரைத்துள்ளனர். அவர் ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு எதிராக தைரியமாக தீவிரமாக செயல்பட்டவர். தமாகா பிறப்பால் தொய்ந்து போயிருந்த காங்கிரஸை தூக்கி நிறுத்தியவர். துணிச்சலாக செயல்பக் கூடியவர், நல்ல பேச்சாளர், அதிரடியாக செயல்படக் கூடியவர் என்றும் கூறியுள்ளனர்.

ஆமாமா.. அந்தோணி!
இதையடுத்து மூத்த தலைவரான ஏ.கே.அந்தோணி மற்றும் ராகுலிடம் இளங்கோவன் குறித்து சோனியா ஆலோசனை கேட்க, இருவருக்கும் இளங்கோவனை நியமிக்க ஆட்சேபனை இல்லை என்று கூறி விடவே, அடுத்த நிமிடமே இளங்கோவனை தலைவராக்கி விட்டதாம் மேலிடம்.












Click it and Unblock the Notifications