ஷரபோவாவிற்கு சச்சினை தெரியாதது இருக்கட்டும்..உங்களில் யாருக்கு சீதா சாகுவைத் தெரியும்?
சென்னை: சச்சின் டெண்டுல்கரை மரியா ஷரபோவாவிற்கு தெரியாது சரி. ஷரபோவாவை சச்சினின் ரசிகர்களுக்குத் தெரியாது என்பதெல்லாம் இருக்கட்டும். ஆனால் உங்களில் யாருக்கேனும் சீதா சாகுவைத் தெரியுமா?.
தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இவரைப் போன்ற திறமையாளர்கள் எவ்வளவு பேர் தங்களுக்கான களம் கிடைக்காமல் போராடி வருகின்றனர் என்பதாவது நமக்கு தெரியுமா?
அதற்கான விடையும் இல்லை. இவரின் தற்போதைய வருமானம் அளிக்கும் தொழில் பானி பூரிக்கடை. டுவிட்டர் மூலம் இன்று அவரை மீண்டும் அறியும் சந்தர்ப்பம் வாய்த்தது.
வீராங்கனை சீதா:
சீதா சாகு.....2011 ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக்ஸில் இரண்டு வெண்கலப்பதக்கங்களை வென்ற வீராங்கனை.
ஏழைக்குடும்ப வீராங்கனை:
மத்தியப் பிரதேச மாநிலம், ரேவாவைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தின் வாரிசுதான் இந்த சீதா சாகு. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. 2011 ஆம் ஆண்டு சிறப்பு ஒலிம்பிக்கில் முறையே 200 மீட்டர் மற்றும் 1600 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
உதவிகள் இல்லை:
வெற்றியுடன் ஊர் திரும்பிய சீதாவிற்கு அம்மாநில அரசு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்ததுடன் சரி. இன்று வரை எந்த உதவியும் அவரை சென்று அடையவில்லை என்பதுதான் உண்மை.
பானிப்பூரிக் கடை:
கணவராலும் அதிகம் சம்பாதிக்க இயலாத நிலையில், சீதா தற்போது ரோட்டோரத்தில் பானிப்பூரிக்கடை நடத்தி வருகின்றார். வருமானம் போதுமானதாக இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருந்து வருகின்றார் சீதா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியானது மீண்டும் டுவிட்டரின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
திறமையை மதிப்போம்:
சீதா மட்டுமல்ல, அவரைப் போன்ற பல்வேறு திறமையாளர்கள், சாதனை புரியத் திறன் இருந்தும் நமது நாட்டின் உளுத்துப் போன அரசியல் வாதிகளாலும், ஊழல் பெருச்சாளிகளாலும் புழுதியில் விழுந்த தாமரையாய் கிடப்பதுதான் நிதர்சனமான உண்மை.
புதைந்து கிடக்கும் திறமைகள்:
இவரைப்போல் எத்தனை எத்தனை ஆயிரம் திறமைசாலிகள் மண்ணோடு புதைந்து போயிருக்கின்றார்கள் தெரியுமா? சச்சினைப் பற்றி சொன்னால் சண்டைக்கு வரும் நாமும் இதுபோன்ற திறமையாளர்களைக் கைதூக்கிவிட முன்வர வேண்டும்.