எச்.ராஜாவை ஏன் சந்தித்தார் ஆளுநர்?
Recommended Video

சென்னை: எச்.ராஜாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசியுள்ளது புருவங்களை உயர்த்தியுள்ளது. இது தார்மீக ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸார், காவல்துறை குறித்தும் நீதித்துறை குறித்தும் அவதூறாக பேசியதாக கூறி ஏற்கனவே 8 பிரிவுகளில் ராஜா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரைக் கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ராஜா கைது செய்யப்படவில்லை.
இதையடுத்து ராஜா மீது திருவண்ணாமலையிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல திமுக எம்.பி. கனிமொழி மற்றும் மறைந்த தலைவர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாகவும் ராஜா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆளுநருடன் சந்திப்பு
இந்த நிலையில் கடலூர் அதிமுக எம்.பி. அருண்மொழித்தேவன், எச். ராஜா மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸிலும் புகார் கொடுத்திருந்தார்.
அந்தப் புகாரை ஏற்று நேற்று வழக்குப் போட்டுள்ளனர். இத்தனை வழக்குகளுக்கு பிறகும் இன்று ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து அரை மணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு வெற்றிகரமாக வீடு திரும்பியுள்ளார் ராஜா. இந்த சந்திப்பில் இரு விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது.

முதல் கேள்வி
அதில் முதலாவது, பல்வேறு வழக்குகள் எதிர்கொண்டு வரும் ஒரு கட்சியின் பிரமுகர், மாநில அரசியல் சாசனத்தின் பாதுகாவலரான ஆளுநரை சென்று சந்தித்துவிட்டு, அதுவும் கூட அவரது ராஜ் பவன் சென்று சந்தித்துவிட்டு வருவது என்பது ஏற்புடையதா? என்ற கேள்வி முதன்மையானது. சட்டப்படி இதற்கு தடைகள் இல்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் தார்மீக அடிப்படையில் இந்த சந்திப்பை ஆளுநர் தவிர்க்க வேண்டாமா?

ஆளுநரிடமே நெருக்கம்
மாநில ஆளுநரை, எச்.ராஜா சென்று சந்தித்துவிட்டு வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறைக்கு எவ்வாறு துணிச்சல் வரும் என்பது தார்மீக அடிப்படையிலான கேள்வியாக உள்ளது. மாநில ஆளுநர் என்பவர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளிக்கக் கூடியவர். அப்படியான ஒருவர் தன்னை சந்திக்க ராஜாவிற்கு, ராஜ்பவனில் அவகாசம் கொடுத்தது, இவரைக் கைது செய்து ஏன் மேலிடத்தை பகைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தமிழக அரசுக்கும் கூட ஏற்படுத்திவிடும். இதை ஆளுநர் கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும்.

முதல்வரை சந்திக்காத ராஜா
இந்த சந்திப்பில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் முதல்வரையோ, துணை முதல்வரையோ, அமைச்சரை சந்தித்து எந்த பிரச்சினைக்கும் பேசாத ராஜா நேரடியாக ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார் அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்ற போதிலும் கூட மாநிலத்தில் நடப்பது மக்களாட்சியா, அல்லது, ஆளுநர் ஆட்சியா என்ற சந்தேகத்தை ராஜாவின் நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது.

பைபாஸ் செய்கிறாரா ராஜா
தன் மீதான வழக்கு குறித்து விளக்கம் அளிப்பதற்கு அல்லது அதில் உள்ள அம்சங்கள் குறித்து பேசுவதற்கு காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வரை சந்தித்திருக்க முடியும். ஆனால் ஆளுநரை ராஜா சந்தித்திருப்பது, தனக்கு தமிழக அரசு ஒரு பொருட்டே கிடையாது என்று எக்காளம் விடுவதற்குச் சமம். ஏற்கனவே தன் மீதான வழக்குகளை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லாமல் வேறு நீதிபதி தானாக முன்வந்து விசாரிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார் ராஜா. இது நீதித் துறை விஷயத்தில் அவரின் நிலைப்பாடு என்றால், ஆட்சித் துறையில் முதல்வரை சந்திக்காமல் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கு ஆளுநரும் அனுமதி வழங்கியுள்ளார். இவற்றையெல்லாம் மாநில அரசின் உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications