குடும்பத் தகராறு.. மனைவியை தற்கொலைக்கு தூண்டிய ராணுவ அதிகாரி கைது
சென்னை: தாம்பரம் சேலையூரில் குடும்ப தகராறில் மீரா என்பவர் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ராணுவ அதிகாரி ரங்கநாதனை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(42). இவர் ராணுவத்தில் கர்னலாக நாகாலாந்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மீரா(36). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி, மகள்களை பார்க்க ரங்கநாதன் விடுமுறையில் சேலையூர் வந்தார். அன்று முதல் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மீரா நேற்று முன்தினம் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மீராவின் தந்தை சுந்தர்ராஜன், சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மீரா வீட்டில் விசாரணை செய்த போலீசார் தற்கொலைக்கு முன்பு மீரா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். தொடர்ந்து மனைவியை தற்கொலை செய்ய தூண்டியதாக ராணுவ அதிகாரி ரங்கநாதனை போலீசார் கைது செய்தனர்.