நடத்தையில் சந்தேகம்... சேர்ந்து வாழ மறுத்த மனைவியை நடுரோட்டில் பிளேடால் கிழித்த கணவன்!
சென்னை கீழ்பாக்கத்தில் நடுரோட்டில் வைத்து மனைவியின் முகத்தை பிளேடால் கிழித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை : பிரிந்து வாழும் மனைவியுடன் சமரசம் பேசச்சென்ற போது நடுரோட்டில் வைத்து மனைவியின் முகத்தை பிளேடால் கிழித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கெல்லிஸ் மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி. இவருக்கும் சொகப்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஜெகதீஷ், மனோஜ் என இரு மகன்கள் உள்ளனர்.

சுரேஷ் அடிக்கடி காமாட்சியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் தினமும் கஷ்டப்பட்டு வந்த காமாட்சி கடந்த ஓராண்டாக கணவனைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காமாட்சி வீட்டு வேலை செய்வதற்காக சென்ற போது அவரைப் பின் தொடர்ந்து வந்த சுரேஷ், தன்னுடன் சேர்ந்து வாழுமாறு அழைத்துள்ளார். ஆனால் காமாட்சி மறுக்கவே நடுரோட்டில் பட்டபகலில் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் மனைவியின் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் சுரேஷ் பிளேடை வீசிவிட்டு தப்பிவிட்டார். உடனடியாக அந்தப் பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் போலீசார் காமாட்சியிடம் புகார் பெற்று தலைமறைவாக இருந்த சுரேஷை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications