ஜெ.வுக்காக சிலுவையில் அறைந்து கொண்ட “முரட்டு பக்தர்” ஹூசைனி இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டபோது, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து வருத்திக் கொண்டவர் கராத்தே வீரர் ஹூசைனி.
அதோடு, விமானத்தைக் கடத்தி ஜெயலலிதாவை விடுவிக்கத் திட்டம் தீட்டியதாக பேட்டியொன்றில் கூறி பதற்றத்தையும் ஏற்படுத்தியவர். அந்தளவிற்கு ஜெயலலிதா மீது முரட்டுத்தனமான அதீத அன்பு கொண்டவர் ஹூசைனி.
இந்நிலையில், தற்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரம் மற்றும் அதிமுகவினர் உரிய விளக்கம் அளித்து வரும் நிலையிலும், சமூகவலைதளங்கள் ஒருபுறம் வதந்திகளை பரப்பிய வண்ணமே உள்ளன.
இப்படிப்பட்ட பரபரப்புகளுக்கு விகடனுக்கு பேட்டி அளித்துள்ளார் ஹூசைனி. அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அப்ப மாதிரி இல்லை...
ஜெயலலிதா கைது செய்யப்பட்ட செய்த மாதிரி, எதுவும் இப்ப பண்ணப்போறது இல்ல. காரணம், அப்போ அவங்களுக்கு எதிரா, தவறா ஒரு தீர்ப்பு சொன்னாங்க. அதில் இருந்து அவங்க வெளியே வர்றதுக்கு சாதாரண தொண்டர்கள் முதல் பொதுமக்கள் வரை எல்லோரும் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டாங்க.
பிரார்த்தனையின் பலன்...
அதுபோலவே நானும் பிரார்த்தனை பண்ணுணேன். என்னை நானே சிலுவையில் அறைஞ்சு வருத்திக்கிட்டேன். அந்தப் பிரார்த்தனைக்குப் பதிலா அம்மாவும் வெளியே வந்தாங்க.
சாதாரண காய்ச்சல் தான்...
இப்போ அவங்களுக்கு சாதாரணக் காய்ச்சல். அதுவும் சரியாகிடுச்சு. நல்லா இருக்காங்க. வழக்கம்போல செயல்படுறாங்க. இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்துருவாங்க.
100 வருசம் வாழ்வாங்க...
இத எல்லாம் நான் சொல்லல. அங்க இருக்கக்கூடிய டாக்டர்களே சொன்னது இது. அதனால இன்னும் நூறு வருஷத்துக்கு அம்மாவை யாராலும் அசைக்கமுடியாது'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.