தீபா மருமகள் எனில் ஜெ.வுக்கு நான் மகன் முறையாக்கும்... மாதவன் 'பொளேர்'
தீபா மருமகள் என்றால் ஜெயலலிதாவுக்கு நான் மகன் முறை என்று தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்து பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு தீபா மருமகள் என்றால், நான் மகன் முறை என்று தீபாவின் கணவரும் எம்.ஜே.டி.எம்.கே. கட்சியின் தலைவருமான மாதவன் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தீபாவுக்கும், மாதவனுக்கும் தீபா பேரவை தொடங்கியதிலிருந்தே கருத்து வேறுபாடு. ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்து முறைப்படி தனிக்கட்சியை தொடங்குவதாக அறிவித்தார் தீபா.
பின்னர் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தபோது கணவரின் பெயரை தீபா குறிப்பிடாமல் விட்டது குறித்து சர்ச்சை கிளம்பியது. ஞாபக மறதியில் தன் பெயரை விட்டு விட்டார் என்றும், தீபாவை முதல்வராக்குவதே தன்னுடைய லட்சியம் என்று மாதவன் வக்காலத்து வாங்கினார்.
இயல்பான தம்பதி
சன் நியூஸ் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாதவன் அளித்த பேட்டியில் தெரிவிக்கையில், எங்களது திருமணம் காதல் திருமணம் அல்ல. தீபாவின் அம்மா பார்த்து செய்துவைத்த திருமணம்.எனக்கும் என் மனைவிக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. நான் அவருக்கு எதிரானவன் அல்ல. நாங்கள் இயல்பான கணவன்- மனைவியாகதான் உள்ளோம்.
தீபக் நண்பர்களின் குழப்பம்
தற்போது தீபாவின் சகோதரர் தீபக்கின் நண்பர்களின் தீபாவுக்கு பின்னால் இருந்து இயக்குகின்றனர். தீபா என்னை ஓ.பன்னீர் செல்வம், சசிகலா குடும்பத்தினர் இயக்குவதாக கூறுகின்றனர். ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லை. என் மனைவி அழைத்தால் மட்டுமே நான் அவரது வீட்டுக்கு செல்வேன்.
தீபாவை காக்க...
கட்சிக்கான கொள்கை, லட்சியம் குறித்து மாநாட்டில் அறிவிப்பேன். என் மனைவியை தனித்து செயல்பட விடாமல் அவரை சுற்றி உள்ளவர்கள் தடுத்து வருகின்றனர். தீபா பேரவைக்கான விண்ணப்பப் படிவத்தில் பணம் பெற்றுக் கொண்டு ஊழல் செய்தது தீபா அல்ல. அவரை சுற்றி இருப்பவர்கள்தான். தீபாவை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே கட்சியைத் தொடங்கியுள்ளேன். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் கேட்டதினால் கட்சியைத் தொடங்கியுள்ளேன்.
சசிகலா யாருங்க...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் செயல்பாடுகள் சரியில்லாததால் நான் கட்சி ஆரம்பித்துள்ளேன். சசிகலா, தினகரன் யாரென்றே தெரியாது. அவர்களை பார்த்தது கூட கிடையாது, அப்படியிருக்கையில் நான் அவர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டதாக கூறும் குற்றச்சாட்டு தவறானதாகும். எனக்கு ஒரகடத்தில் விவசாய நிலங்கள் உள்ளன. யாரிடமும் பணம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஜெ.வுக்கு மகன் முறை
தீபாவைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாவுக்கு மருமகள். அப்படியென்றால் நான் ஜெயலலிதாவுக்கு மகன் முறை அல்லவா வரும். இவ்வாறு மாதவன் கூறினார்.