மு.க.ஸ்டாலினுடன் மோதலா... இல்லவே இல்லை என்கிறார் குஷ்பு
சென்னை: தனிநபர் விமர்சனத்தில் தி.மு.க.வுக்கு நம்பிக்கை இல்லை. நான் தி.மு.க.வின் சாதனைகளையும், அ.தி.மு.க. அரசின் தோல்விகளை பற்றி மக்களிடம் சொல்லி வாக்குகள் கேட்பேன் என்று பிரச்சாரத்திற்கு தயாராகிவரும் குஷ்பு கூறியுள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் தனக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு ஏப்ரல் 5ம் தேதி முதல் 17 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதாக திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
தன்னுடைய பிரச்சார வியூகம் தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு குஷ்பு பேட்டி அளித்துள்ளார்.

கல்வீசிய திமுகவினர்
கேள்வி: கடந்த ஆண்டு உங்கள் வீடு மீது தி.மு.க.வினர் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பிறகு தி.மு.க.வுடனான உங்கள் உறவு எப்படி உள்ளது?
குஷ்பு: நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். தி.மு.க.வுடனும், தி.மு.க. தலைமையுடனான எனது உறவு எப்போதும் நன்றாகவே உள்ளது. திருச்சி மாநாட்டில் எனக்கு பேச வாய்ப்பு தரப்பட்டது.
எனவே தி.மு.க.வுடனான எனது பணிகள் எப்போதும் போல தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஸ்டாலினுடன் பிரச்சினை
கேள்வி: மு.க.ஸ்டாலின்தான் அடுத்த வாரிசு என்ற விஷயம் தொடர்பாக கடந்த ஆண்டு நீங்கள் தெரிவித்த கருத்துக்கு பிறகு, நீங்கள் தி.மு.க.வில் ஓரம் கட்டப்படுவதாக சொல்லப்படுகிறதே?
குஷ்பு: அடிப்படையற்ற இத்தகைய வதந்திகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை. யூகத்தின் பேரில் கேட்கப்படும் இத்தகையை கேள்விகளுக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

நான் திமுகதான்
கட்சியில் எனக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தால் நான் தி.மு.க.வில் இருந்து விலகி இருப்பேன். ஆனால் இன்னமும் நான் தி.மு.க.வில்தான் இருக்கிறேன். சூறாவளி சுற்றுப் பயணத்துக்கு தயாராகி வருகிறேன்.

திமுகவின் சாதனைகள்
கேள்வி: உங்களது தேர்தல் பிரசாரம் எப்படி அமையும்?
குஷ்பு: 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் தி.மு.க. செய்த சாதனைகளை சொல்லி நான் வாக்குகள் கேட்பேன். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க.வின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வேன்.

அதிமுகவின் தோல்விகள்
இவை தவிர தற்போதைய அ.தி.மு.க. அரசின் தோல்விகள் பற்றியும் கூட்டங்களில் பேசுவேன். தி.மு.க. என்ன செய்யவில்லை. அ.தி.மு.க. என்ன செய்தது? என்பது பற்றி அ.தி.மு.க.வில் இருந்து யாராவது வந்து என்னிடம் கேட்டால் நிச்சயமாக அவர்களை பாராட்டி, பதில் சொல்ல காத்துக் கொண்டிருக்கிறேன்.

17 நாட்கள் பிரச்சாரம்
கேள்வி: 17 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்ய உங்கள் பயணத்திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
குஷ்பு: என் மகள்களை விட்டு பிரிய முடியாததால் தற்போது நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் பாராளுமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருதடவை வருவதாகும். சூறாவளி பிரசாரத்துக்காக 17 நாள் அர்ப்பணிப்பது கஷ்டமானதுதான். என்றாலும் கட்சிக்காக கஷ்டங்களை தாங்கிக் கொண்டு இதை செய்ய தயாராக உள்ளேன்.

தனிநபர் விமர்சனம்
கேள்வி: விஜயகாந்த், சரத்குமார் இருவரும் உங்கள் தலைவரை விமர்சித்து பேசி வருகிறார்கள். நீங்கள் அவர்கள் இருவருக்கும் எதிராக பேசி பிரசாரம் செய்வீர்களா?
குஷ்பு: எனது கட்சிக்கோ அல்லது எனக்கோ விஜயகாந்தும், சரத்குமாரும் தனிப்பட்ட முறையில் எதிரானவர்கள் அல்ல. தனிநபர் விமர்சனத்தில் தி.மு.க.வுக்கு நம்பிக்கை இல்லை.
எனவே நான் தி.மு.க.வின் சாதனைகளையும், அ.தி.மு.க. அரசின் தோல்விகளை பற்றி மக்களிடம் சொல்லி வாக்குகள் கேட்பேன்.

நான் வேட்பாளரா?
கேள்வி: நீங்கள் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவீர்கள் என்று முன்பு தகவல்கள் வெளியானது. நீங்கள் ஏன் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை?
குஷ்பு: எனது தலைவரும், கட்சி மூத்த நிர்வாகிகளும் நான் சரியான வேட்பாளராக இருப்பேன் என்று நினைத்து இருந்தால், நிச்சயமாக இவர்கள் என்னை தேர்ந்து எடுத்து இருப்பார்கள் என்று குஷ்பு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications