என்னைப் பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள்: விஜயகாந்த்
சென்னை: என்னை குறித்தும், கூட்டணி குறித்தும் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்று அறிவிக்கும் முன்பும் சரி அறிவித்த பின்னரும் சரி விஜயகாந்தை மையமாக வைத்தே செய்திகள் உலா வருகின்றன. சமீபத்தில் மக்கள் நல கூட்டணியில் இணைந்த விஜயகாந்த், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இனி விஜயகாந்தை யாரும் நெருங்க முடியாது நாங்களே பதில் சொல்வோம் என்று வைகோ கூறினார்.
வைகோவின் பேச்சே சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்தது. விஜயகாந்துக்கு எதுவும் பிரச்சினையோ, பிரச்சாரத்தில் பேச மாட்டாரா என்றும் கேள்விகள் எழுந்தது.

மக்கள் நல கூட்டணியின் 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று தொடங்க உள்ளது. இந்த பிரசாரத்தில் விஜயகாந்த் கலந்துகொள்ளவில்லை. அதற்கு அவரது உடல்நிலை காரணம் என்றும் கூறப்படுகிறது.
விஜயகாந்த், சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று வருவது வழக்கம். கடந்த லோக்சபா தேர்தலின்போது, சிங்கப்பூர் சென்று சில நாட்கள் சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பினார் விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூருக்கு செல்ல உள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. நேற்றிரவு 11.30 மணிக்கு புறப்படும் விமானம் ஒன்றிலும் விஜயகாந்த் பெயர் இருந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தகவல் நேற்று வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்-புக் மூலம் காட்டுத் தீ போல பரவியது.
இந்த நிலையில், விஜயகாந்த் தனது முகநூல் பதிவில், 'என்னைப் பற்றியோ, நமது கூட்டணி குறித்தோ பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என்று கூறியுள்ளார்.
இதேப்போல, தேமுதிக இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷும் தனது முகநூல் பக்கத்தில், தேமுதிக தலைவர் பற்றியும், தே.மு.தி.க.வைப் பற்றியும் அவதூறு செய்திகளும், அடிப்படை ஆதாரமற்ற செய்திகளும் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.
குறிப்பாக, விஜயகாந்த் சிங்கப்பூருக்கு சிகிச்சைபெற செல்வதாக வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன் அதன் உண்மைத் தன்மையை அறிந்து வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications