நானே இப்போதும் தலைமைச் செயலர்- தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை- ராமமோகன் ராவ் அதிரடி!
சென்னை: மறைந்த ஜெயலலிதாவால் தமிழக அரசின் தலைமை செயலராக நியமிக்கப்பட்ட நானே இப்போதும் தலைமைச் செயலர் என்று ராமமோகன் ராவ் அதிரடியாக தெரிவித்துள்ளார். என் மகனுக்கான தேடுதல் வாரண்ட்டில் என் பெயர் இல்லை; எதற்காக தலைமை செயலகத்துக்கு வந்தனர்? இதைத் தடுக்க தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை.
ஜெயலலிதா உயிருடன் இருந்தால் இப்படி நடந்திருக்காது எனவும் ராமமோகன் ராவ் கூறினார்.
தலைமைச் செயலராக இருந்த ராமமோகன்ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அத்துடன் தமிழக அரசின் தலைமை செயலகத்தில் உள்ள ராமமோகன் ராவ் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனைக்கு துணை ராணுவம் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ராமமோகன் ராவ் கூறியதாவது:
- வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த மமதா பானர்ஜி, ராகுல், எஸ் ஆர் பாலசுப்பிரமணியன், தீரனுக்கு நன்றி
- என்னுடைய வீட்டில் சோதனை நடத்துவதற்கான சர்ச் வாரண்ட்டில் என்னுடைய பெயரே இல்லை
- என் மகன் என் வீட்டில் வசிக்காத நிலையில் வருமான வரித்துறையினர் எப்படி சோதனை நடத்தலாம்?
- என் வீட்டில் மொத்தம் ரூ1,12,320 மட்டுமே கைப்பற்றப்பட்டது
- என் மகள், மனைவியின் நகைகள் 40 சவரன் மட்டுமே இருந்தது.
- என் வீட்டில் எந்த ஒரு ரகசிய அறையுமே இல்லை.
- ஜெயலலிதா உயிருடன் இருந்தால் இப்படி நடந்திருக்காது
- ஜெயலலிதா இல்லாத நிலையில் தமிழக மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணருகின்றனர்
- என் வீட்டில் இருந்து எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை
- என் வீட்டில் இருந்து எம்ஆர்சி கிளப் மெம்பர் தொடர்பான ஆவணம் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டது.
- என் உயிருக்கு சிலர் குறிவைத்துள்ளனர்.
- என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
- வருமான வரி சோதனையின் போது சிஆர்பிஎப் படையினரால் துப்பாக்கி முனையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டேன்.
- தலைமை செயலகத்துக்குள் சிஆர்பிஎப் நுழைய எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது?
- தலைமை செயலகத்தைக் காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது. தமிழக அரசுக்கு தைரியம் இல்லை.
- ஜெயலலிதாவால் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்ட நானே இப்போதும் தலைம்மைச் செயலர்
- என் மீதான புகார்களுக்கு ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா?
- சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை.
- என் மகனுக்கும் தமிழக அரசுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
- இச்சோதனையின் போது அதிமுக தொண்டர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
இவ்வாறு ராமமோகன் ராவ் கூறினார்.