கூவத்தூர் ரகசியங்களை சொல்லவும் தயங்க மாட்டேன்.. போட்டி சட்டசபையில் வெளுத்து வாங்கிய கருணாஸ்!
தமிழகத்துக்கு விடிவு காலம் கிடைக்கும் என்றால் கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன் என போட்டி சட்டசபையில் எம்எல்ஏ கருணாஸ் அதிரடியாக கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழகத்துக்கு விடிவு காலம் கிடைக்கும் என்றால் கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன் என போட்டி சட்டசபையில் எம்எல்ஏ கருணாஸ் அதிரடியாக கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் உடனே பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் மாதிரி சட்டசபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கு சபாநாயகநராக சக்ரபாணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டி சட்டசபையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அதிமுக ஆதரவு எம்எல்ஏ. கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கச்சேரி பாட அனுமதி
போட்டி சட்டசபையில் பேசிய கருணாஸ் பல்வேறு அதிரடியான குற்றச்சாட்டுக்களை கூறினார். அவர் பேசியதாவது, ஜெயலலிதா பேரவையில் கச்சேரி பாட கூட அனுமதி தந்தார் ஆனால் நேற்று மக்கள் பிரச்னை குறித்து பேச அனுமதிக்கவில்லை.

அமைச்சராகி இருப்பேன்
ஜெயலலிதா ஒரு வாரம் கழித்து அப்பல்லோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன். ஜெயலலிதா இருக்கும்போது வெளி மாவட்டம் செல்ல காவல்துறை பாதுகாப்பு எனக்கு இருந்தது.

தவறுகளை சுட்டிக்காட்டக்கூடாது
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேரவையில் பேசியதால் பாதுகாப்பை விலக்கிவிட்டார்கள். தவறுகளை சுட்டிக் காட்ட கூடாது என தற்போதுள்ள அரசு நினைக்கிறது.

ரகசியத்தை சொல்ல தயங்க மாட்டேன்
தமிழக அரசினை விரைவில் கலைத்துவிட்டு ஸ்டாலின் தலைமையில் புதிய அரசை உருவாக்க வேண்டும். தமிழகத்துக்கு விடிவு காலம் கிடைக்கும் என்றால் கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன்.

நான் தான் ஆதாரம்
கூவத்தூர் சம்பவங்களுக்கு நான் ஒருவன் தான் ஆதாரம். துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என முதல்வர் கூறலாமா?

புதிய சட்டசபை அமையும்
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்கிறது இந்த அதிமுக அரசு. விரைவில் ஸ்டாலின் தலைமையில் புதிய சட்டசபை அமையும். இவ்வாறு கருணாஸ் பேசியுள்ளார்.

ஜெ.வால் எம்எல்ஏ ஆனவர்
கருணாஸின் இந்த அதிரடிப் பேச்சு ஆளும் தரப்பினர் இடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் எம்எல்ஏவாக்கப்பட்ட கருணாஸ், தற்போது ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications