பாடப் புத்தகத்தில் என் பெயர் இருப்பதால் அ.தி.மு.க. அரசுக்கு 'மனப்புழுக்கம்' ... சாடுகிறார் கருணாநிதி
சென்னை: தம்முடைய பெயர் இடம் பெற்ற பாட புத்தகத்தை திரும்ப பெறுவதால் எந்த வருத்தமும் இல்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அ.தி.மு.க. ஆட்சியினருக்கு இது கை வந்த கலை என்றும் இச்செயல் முதல் முறையும் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
2004-2005ம் ஆண்டு பதினோராம் வகுப்பு பாடநூல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, முன்னாள் பாடநூல் மேம்பாட்டுக் குழுத் தலைவர் மு.நாகநாதன் முகவுரை எழுதி இருந்தார். அதில், அன்றைய முதல்வர் கருணாநிதிக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தார்.
ஆட்சி மாற்றம் வந்தபோதும், அதை யாரும் சரியாகக் கவனிக்காமல், அது அப்படியே தொடர்ந்தது. இந்த ஆண்டும் அந்த முகவுரையை மாற்றவில்லை. இத்தனை ஆண்டுகளாக அதை சரி செய்யாத அதிகாரிகள், இந்த முறை அதை ஒரு பெரிய பிரச்னையாக எடுத்துக்கொண்டனர். அதனால், கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து அச்சாகி இருக்கும் புத்தகங்களை எல்லாம் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பல ஆயிரம் புத்தகங்களையும் திருப்பி வாங்கிக்கொண்டிருக்கின்றனர். இதற்கு அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அறிக்கை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
பதினோராம் வகுப்பு பாடப் புத்தகத்தில் பாடப்பகுதியில் அல்லாமல் அணிந்துரையில் தமது பெயர் இருந்ததைக் கூட பொறுக்க முடியாமல் அந்த புத்தகங்களை மாணவர்களின் வீடு தேடிச் சென்று திரும்பப் பெறுகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியினருக்கு கை வந்த கலை. சீப்பை ஒளித்து வைப்பதைப் போன்ற இச்செயல் முதல் முறையும் அல்ல. ஆட்சிக்கு வந்தவுடனேயே அரசின் சமூக நலத்திட்டங்களில் ஒன்றுக்கு வைக்கப்பட்டிருந்த என் அன்னையார் பெயரை நீக்கி நிம்மதி அடைந்த ஆட்சிதான் இது.

எப்படிப்பட்ட ஆட்சி
கடந்த மூன்றாண்டுகளாக இந்தப் புத்தகங்கள்தான் விநியோகிக்கப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அணிந்துரையில் எங்கள் பெயர் இருப்பது, சில ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் தெரிந்ததாம். எப்படிப்பட்ட ஆட்சி தமிழகத்திலே நடைபெறுகிறது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

அதிமுக ஆட்சியில்
தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காக, புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தையே மருத்துவமனையாக மாற்றியவர்கள் அல்லவா?. சமச்சீர் கல்வித் திட்டத்திற்கே மூடு விழா நடத்த முயன்றவர்கள் அல்லவா? நீதிமன்றம் கூறிய பிறகும், மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியவர்கள் அல்லவா?

வருத்தம் இல்லை
எனவே மனப் புழுக்கம் நிறைந்த இப்படிப்பட்ட ஆட்சி நடக்கும்போது, என்னுடைய பெயர் இருக்கிறது என்பதற்காக, அந்தப் புத்தகத்தைத் திரும்பப் பெறுகிறார்கள் என்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications