கொடநாடு கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - மவுனம் கலைந்த மர வியாபாரி சஜீவன்
கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மர வியாபாரி சஜீவன் கூறியுள்ளார்.
கோவை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோவையைச் சேர்ந்த மர வியாபாரி சஜீவன் கூறியுள்ளார்.
கொடநாடு சம்பவம் நடந்த போது தான் துபாயில் இருந்ததாகவும், சயன், மனோஜ் உள்ளிட்ட யாரையும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
டிரைவர் கனகராஜை தனக்கு நன்றாக தெரியும் என்றும், அவரை போயஸ்கார்டனில் இருந்து வேலையை விட்டு நிறுத்திய பின்னர், தான் அவருடன் தான் பேசுவதில்லை என்றும் சஜீவன் கூறியுள்ளார்.

கொடநாடு கொள்ளை
கொடநாட்டில் கடந்த 23ஆம் தேதி நள்ளிரவு புகுந்த மர்ம கும்பல், 10 எண் கேட்டில் இருந்த காவலாளியை கொன்று விட்டு ஆவணங்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். அவரது நண்பர் சயன் விபத்தில் சிக்கி கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பலர் கைது
இந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக பலரை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அனைவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

மர வியாபாரி சஜீவன்
இந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு கூடலூர், கோவையில் மரக்கடை வைத்துள்ள சஜீவன் என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. முன்னாள் அமைச்சருடன் நெருங்கி தொடர்பில் இருந்த இவர், யாருடைய அனுமதியும் இன்று கொடநாடு பங்களாவிற்கு சென்று வருவார் என்பதாலும் கனகராஜ், சயனுடன் தொடர்பில் இருந்தவர் என்பதாலும் சந்தேகம் எழுந்தது.

பரபரப்பு செய்தி
கொடநாடு சம்பவம் நிகழ்ந்த போது அவர் துபாயில் இருந்தார். இது சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில நாட்களாக ஊடக செய்திகளில் அடிபட்டார் சஜீவன். இன்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

எந்த தொடர்பும் இல்லை
தனக்கும், கொடநாடு சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சம்பவம் நடைபெற்ற போது தான் துபாயில் இருந்ததாகவும், சயன் உள்ளிட்ட யாரையும் தெரியாது என்றும் கூறியுள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சஜீவன், டிரைவர் கனகராஜை தனக்கு தெரியும் என்றும் போயஸ் கார்டன் பணியில் இருந்து அவரை நிறுத்திய பின்னர் தான் பேசியதில்லை என்றும் கூறினார்.

போலீஸ் கண்டுபிடிக்கனும்
இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று காவல்துறையினர்தான் கண்டுபிடிக்க வேண்டும். கனகராஜ்க்கு தொடர்பு இருக்கிறதா? முன்னாள் அமைச்சர் மில்லருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி தனக்கு தெரியாது. அதை போலீஸ்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications