இலங்கைக்கு எதிரான யு.எஸ்.தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்
சென்னை: ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை இறுதி யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்தக் கோரி ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்துக்கு 23 நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் வெற்றிகரமாக நிறைவேறியது. ஆனால் சீனா, பாகிஸ்தான் உட்பட 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன. இந்தியா உட்பட 12 நாடுகள் வாக்கெடுப்பிலேயே கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் கூறியதாவது: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்பது மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவல்ல.
தீர்மானம் குறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் முடிவு எடுத்திருக்கக் கூடும். தமிழக அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமையில்லாததால், இதுபோன்ற தீர்மானத்தை ஆதரிக்க இயலவில்லை.
காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக கருணாநிதி கூறி இருப்பது ஆச்சரியமளிக்கிறது. மதச்சார்பற்ற அணி அமையும்போது காங்கிரசை தி.மு.க. ஆதரித்தால் வரவேற்போம்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications