நான் குற்றமற்றவன், பொய் வழக்கு போட்டுள்ளார்கள்: ஜாமீன் கோரும் வருண்குமார் ஐ.பி.எஸ்.
சென்னை: இளம்பெண்ணை ஏமாற்றியதற்காக கைதான ஐ.பி.எஸ். அதிகாரி வருண் குமார் தான் குற்றமற்றவர் என்று கூறி ஜாமீன் கோரியுள்ளார்.
இளம் பெண்ணை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி வருண் குமார் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

பிரியதர்ஷினி
பிரியதர்ஷினி கொடுத்த புகாரின் அடிப்படையில் என் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, மிரட்டல் ஆகிய குற்றங்கள் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் அடிப்படையிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு
ஆரம்பத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் வரதட்சணை கொடுமை தடுப்புப்பிரிவு போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

சரண்
இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றிருந்தேன். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பிரியதர்ஷினி மனுதாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நான் ஏப்ரல் 28-ந் தேதி சரணடைந்தேன். அன்றே ஜாமீன் மனுதாக்கல் செய்தேன். ஆனால் எனது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜாமீன் ரத்து
இந்த நிலையில் ஐகோர்ட்டில் பிரியதர்ஷினி தாக்கல் செய்த மனுவின்படி, எனது ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு இடைக்காலத்தடை விதித்தது. பின்னர் ஐகோர்ட்டின் உத்தரவுப்படி அந்தத்தடை விலக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எனது ஜாமீன் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, எனது தரப்பு விவாதங்களை சரிவர கவனிக்காமல் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.

குற்றம் செய்யவில்லை
என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. ஜாமீன் பெற்றுவிட்டு தலைமறைவு ஆகமாட்டேன். வழக்கின் சாட்சிகளைக் கலைக்கமாட்டேன். எனவே எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications