நான் அன்னிக்கு அப்படி பண்ணலைனா வைத்திலிங்கத்தை யாருக்கு தெரியும்? - ஜெயக்குமார் பதிலடி!
சென்னை : அதிமுகவில் ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கம் - எடப்பாடி அணியின் ஜெயக்குமார் இடையே வார்த்தை மோதல் முற்றியுள்ளது. எடப்பாடி பழனிசாமி எனக்கு ஜூனியர் என வைத்திலிங்கம் விமர்சித்த நிலையில், வைத்திலிங்கத்தை ஒன்றிய செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்ததே நான் தான் என ஒரே போடாக போட்டுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்திற்கும், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக வார்த்தைப் போர் வலுத்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அண்மையில் அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. வைத்திலிங்கத்தின் கோட்டையான ஒரத்தநாட்டிற்கே சென்று அவரை கடுமையாக விளாசினார் எடப்பாடி பழனிசாமி.

அதைத்தொடர்ந்து, ஈபிஎஸ்ஸை சரமாரியாக விளாசி பதிலடி கொடுத்து வருகிறார் வைத்திலிங்கம். இதற்கு ஈபிஎஸ் அணியின் ஜெயக்குமார் எதிர்வினை ஆற்றி வருகிறார். "திமுகவுக்கு விலைபோய் விட்ட வைத்தியலிங்கம் அதிமுகவை விமர்சிப்பதை ஏற்க முடியாது. வைத்திலிங்கம் ஊழலில் சிக்கியிருப்பதால் அதிலிருந்து தப்பிக்க திமுகவின் பி-டீமாக மாறியுள்ளார். விளையாட்டு பிள்ளையாக கூஅ இருக்கலாம். வைத்தியலிங்கம் போன்று விளங்காத பிள்ளையாக இருக்கக்கூடாது" என ஜெயக்குமார் தாக்கிப் பேசினார்.
இந்நிலையில், மன்னார்குடியில் நேற்று பிரஸ் மீட்டில் பேசிய வைத்திலிங்கம், "நான் 2001-லேயே அமைச்சர், எடப்பாடி பழனிசாமி 2011ல் தான் அமைச்சர் ஆனார். எனக்கு அவர் ஜூனியர் தான். 1984ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் ஜனதா தளம் கட்சிக்கு வேலை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி. திராவிட வரலாறு, அதிமுக வரலாறு பற்றி தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி.
ஊழலை பற்றி ஜெயகுமார் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் ஒரு கோமாளி. எம்.எல்.ஏ தேர்தலில் தோல்வி அடைந்த அவர் அடுத்த 3 ஆண்டுக்குள் மாநிலங்களவை சீட் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று பேசிவருகிறார். அவர் இனி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாது. அவருக்கு அரசியல் எதிர்காலம் இனி கிடையாது." என காட்டமாகப் பேசினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வைத்திலிங்கத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். ஜெயக்குமார் பேசுகையில், "நான் அவர்களைப் போல பதவி வெறி பிடித்தவன் அல்ல. மக்களை நம்பி இருப்பவன் நான். வெற்றி தோல்வி பெரிய விஷயம் அல்ல. 25 வருடங்கள் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி 1989ல் எம்.எல்.ஏ ஆகிவிட்டார். 1989ல் வைத்திலிங்கம் யாரென்றே யாருக்கும் தெரியாது. 1996-1997ல் கட்சித் தேர்தல் நடந்தபோது நான் தஞ்சாவூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக செயல்பட்டேன். 1998ல் ஒரத்தநாட்டில் முதன்முதலில் வைத்தியலிங்கத்தை அறிமுகம் செய்தவன் நான்.
ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராக வைத்திலிங்கத்தை பரிந்துரை செய்ததே நான் தான். வைத்திலிங்கம் அன்று பதவியைப் பெற கையெழுத்துப் போட்டவனே இந்த ஜெயக்குமார் தான். அப்படிப்பட்ட வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமி குறித்து தேவையில்லாமல் பேசக்கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications