ஸ்டாலினுக்கு இருக்கும் அதே தகுதி எங்களுக்கும் இருக்கு: எடப்பாடி பழனிசாமி
சென்னை: ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளதோ அதே தகுதி தனக்கும் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதியின் மகன் ஸ்ரீராமின் திருமண நிச்சயதார்த்தம் திருச்சியில் நடந்தது.
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
வழக்கு
எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பது பத்திரிகையாளர்களாகிய நீங்கள் சொல்லியே தெரியும். எங்களுக்கு அப்படி எந்த தகவலும் வரவில்லை.
அரசு கோப்புகள்
ஓ. பன்னீர்செல்வம் கூறியது போன்று எந்த அரசு கோப்புகளும் தேங்கவில்லை. அனைத்து கோப்புகளிலும் நான் கையெழுத்துபோட்டு அரசாணை பிறப்பித்து திட்டப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
துணிச்சல்
நான் எந்த விஷயத்தில் துணிச்சலாக செயல்படவில்லை என்பதை பொன். ராதாகிருஷ்ணன் கூறினால் பதில் அளிக்க வசதியாக இருக்கும் என்றார் முதல்வர் பழனிசாமி.
ஸ்டாலின்
மு.க. ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் அதிமுகவில் இல்லை என்று திருமாவளவன் கூறியிருக்கிறார் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது, ஸ்டாலின் சட்டசபைக்கு வந்த அதே 1989ம் ஆண்டு நான் எடப்பாடி தொகுதி சார்பில் சட்டசபைக்கு வந்தேன். அவருக்கு இருக்கும் தகுதிகள் எங்களுக்கும் இருக்கிறது என்றார்.