நான் சொல்றதைத்தான் போடப்போறீங்களா? நிருபரிடம் சீறிய மு.க. அழகிரி
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு 2 மாதத்திற்கு முன்பாக தனது முடிவை அறிவிப்பேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறியுள்ளார். திமுகவில் இணைவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், நான் சொல்றதைத்தான் நீங்க போடப்போறீங்களா? நீங்களா எதையாவது எழுதுங்க என்று கோபத்துடன் கூறினார்.
திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புப் செயலாளராக இருந்தவர் மு.க.அழகிரி. கடந்த 2013ம் ஆண்டு இறுதியில் ஒட்டப்பட்ட பிறந்தநாள் போஸ்டரால் கலகம் ஏற்படவே கட்சியை விட்டு கட்டம் கட்டப்பட்டார். 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு எதிராக செயல்பட்டு எம்.பி தேர்தலில் போட்டியிட்டவர்கள் படுதோல்வியடைய காரணமாக இருந்தார்.
இதனால் திமுக தலைமை கடும் கோபமடைந்தது. அழகிரியை இனி திமுகவிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று அக்கட்சியின் பொருளாளரும், அவரது தம்பியுமான ஸ்டாலின் கூறி வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு பிறந்தநாளின் போதே அழகிரி மீண்டும் திமுகவில் இணைவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஸ்டாலினின் தடையால் அது கைகூடவில்லை. பெற்றோரின் திருமண நாளில் தாயிடம் மட்டுமே ஆசி பெற்றுவந்தார்.
இதனிடையே கருணாநிதியிடம் அவர்களின் உறவினர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டதாகவும் ஜனவரி 30ம் தேதி அழகிரி தனது பெற்றோரிடம் ஆசி பெறும் கையோடு கட்சியில் இணைவார் என்றும் கூறப்பட்டது. ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. ஆனால் அதுவும் நடக்கவில்லை என்பதால் விரக்தி மனநிலையிலேயே சில தினங்களுக்கு முன்னர் பேட்டி அளித்தார். நான் யாரையும் சந்திக்க திட்டமிடவில்லை என்றும் கூறினார்.
இந்த நிலையில் நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் திமுகவில் மீண்டும் அழகிரி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகிறதே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவரோ அது வதந்தியாகத் தானே உள்ளது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. இதுபற்றி நான் கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இதன் மூலம் இனி திமுகவிற்குள் அழகிரி ரீ என்ட்ரி ஆவது சிரமம்தான் என்றும் கூறப்பட்டது. இன்று சென்னை விமானநிலையத்திற்கு வந்த அழகிரியிடம் செய்தியாளர்களிடம் திமுகவில் இணைவது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு கோபமாக பதிலளித்த அழகிரியோ, நான் சொல்றதைத்தான் எழுதுவீங்களா? நீங்களே எதையாவது எழுதுறீங்க கோபத்துடன் கேட்டார்.
என் ஆதரவாளர்கள் யாரையும் கட்சியை விட்டு நீக்கலையே. அப்படி நீக்குறதா இருந்தா லட்சம் பேரை கட்சியை விட்டு நீக்கணும். என்னோட முடிவை தேர்தலுக்கு 2 மாதத்திற்கு முன் அறிவிப்பேன் என்றேன்.
கடந்த 2014ம் ஆண்டில் இருந்தே அழகிரி இந்த இரண்டு மாத தவணையை கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.