சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளராக மீண்டும் தொல். திருமாவளவன் போட்டி
சென்னை: சிதம்பரம் லோக்சபா தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே இன்று சென்னையில் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளும் வேட்பாளர்களை அடுத்தடுத்து அறிவித்தன.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சிதம்பரத்தில் தாம் மீண்டும் போட்டியிடுவதாகவும் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்றும் கூறினார்.
கடந்த லோக்சபா தேர்தலிலும் திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றிருந்தது. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டார். அங்கு பாமக சார்பில் பொன்னுச்சாமி வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அத்தேர்தலில் திருமாவளவன் 99 ஆயிரத்து 414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருமாவளவன் 4,28,516 வாக்குகளையும் பொன்னுச்சாமி 3,29,102. வாக்குகளையும் பெற்றிருந்தனர்.