லோக்சபா தேர்தல் வரை நானே தலைவர்... கோஷ்டி தலைவர்களை தெறிக்கவிட்ட தமிழிசை
லோக்சபா தேர்தல் வரை தாமே தலைவர் பதவியில் நீடிப்பேன் என கூறிவருகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
சென்னை: லோக்சபா தேர்தல் வரை தாமே தலைவராக நீடிப்பேன் என கோஷ்டி தலைவர்களை தெறிக்கவிட்டிருக்கிறாராம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தை நோக்கித் தள்ளப்பட்டது பா.ஜ.க. இதனை பா.ஜ.கவில் உள்ள சிலர் பெரிதும் ரசித்தார்கள்.
தமிழக பா.ஜ.க தலைமையால், மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க முடியவில்லை. எதிர்ப்பாளர்களை ஒன்று திரட்டுவதிலும் கோட்டைவிட்டு விட்டார். இப்போது நோட்டாவுக்கும் கீழே ஓட்டு வாங்கியதால், மக்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். அடுத்து வரக்கூடிய தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றால், தலைவரை மாற்றியே ஆக வேண்டும்' என டெல்லிக்குப் புகார் மேல் புகார் மனு அனுப்பினார்கள்.

அமித்ஷா வியூகம்
இதனையடுத்து, தேர்தல் தோல்வி குறித்து தமிழிசையிடம் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சசிகலா குடும்பத்து ஆதிக்கத்துக்கு எதிராக நாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அறிவீர்கள். அந்தக் குடும்பத்துக்கு எதிராக பல சமூகங்களில் இருந்தும் கிளம்பியிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் ஒன்று திரட்டி வாக்கு சேகரிக்கச் சென்றிருந்தால் கௌரவமான வாக்குகளாவது கிடைத்திருக்கும். எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கத் தவறிவிட்டீர்கள்' எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கோஷ்டிகள் மீது புகார்
இதற்குப் பதில் கொடுத்த தமிழிசை, தேர்தலில் நிற்கவே வேண்டாம் என தொடக்கம் முதலே கூறிவந்தேன். இந்த இடைத்தேர்தலிலும் பணம்தான் வெற்றி பெற்றது. நான் மட்டுமே வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்தேன். வேறு எந்த முக்கியத் தலைவரும் நமது வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவில்லை' எனக் குமுறியிருக்கிறார். இதன்பின்னர் பேசிய அமித் ஷா, பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை சசிகலா குடும்பம் எடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து நம்மைப் பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். நீங்களும் தமிழக அரசின் நிலைப்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்யுங்கள். தேர்தல் நேரத்தில் தேவைப்படும் எனக் கூறியதாக பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அதிமுக கூட்டணி
இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க முன்னணி நிர்வாகி ஒருவர், பா.ஜ.க தலைமையுடன் அ.தி.மு.க அரசு இணக்கமாக இருப்பதை அனைவரும் அறிவர். தற்போதுள்ள அ.தி.மு.க அரசு எந்தக் காலத்திலும் பா.ஜ.கவை விமர்சனம் செய்யப் போவதில்லை. ஆளுநர் ஆய்வு உள்பட எந்த ஒரு விஷயத்துக்கும் மாநில அரசிடம் இருந்து பதில் வரவில்லை. லோக்சபா தேர்தலில் குறைந்தது ஏழு இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என அமித் ஷா கணக்குப் போடுகிறார் என்றார்.

சில மாதங்களில் விறுவிறு
மேலும் இந்த ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு லோக்சபா தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிடும். கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பல விஷயங்களை கட்சிகள் விவாதிக்கத் தொடங்கிவிடும். இந்த நேரத்தில் தமிழிசையைப் பதவியில் இருந்து தூக்கிவிட்டால், அடுத்துவரக் கூடிய தலைவருக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும். இதனை உணர்ந்துதான் தமிழிசையின் பதவிக்குப் பலரும் குறிவைக்கிறார்கள். இதனைத் தெரிந்து கொண்ட தமிழிசை, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் குறித்தும் தலைமைக்கும் தெரிவித்து வந்தார்.

சீட்டும் நானே தருவேன்
இதைப் பற்றிப் பேசிய தமிழிசை, 2019 லோக்சபா தேர்தலின்போதும் நான்தான் தலைவராக இருப்பேன். என்னுடைய பதவிக்கு எந்த ஆபத்தும் கிடையாது' எனக் கூறியிருக்கிறார். மேலும், பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இடம்பெற்றால் ஏழு இடங்கள் வரையில் பேசி முடிவு செய்துள்ளனர். இந்தச் சீட்டுகளை பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்குப் பிரித்துக் கொடுக்கப் போவதும் தமிழிசைதான்' என அவருடைய ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். தமிழிசையின் ஆட்டத்தைக் கலைக்க ஆர்.எஸ்.எஸ் தலைமை வரையில் சில நிர்வாகிகள் பேசியுள்ளனர். அமித் ஷாவின் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள் எதிர்ப்பு கோஷ்டியினர் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications