உங்களுக்கு பணியாற்ற நான் காத்திருக்கிறேன்.. அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் தீபா உறுதி
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அனைவரும் செல்வோம். உங்களுக்காக நான் சிறப்பாக செயல்பட காத்திருக்கிறேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
சென்னை: உங்களுக்காக நான்... என்று தீபா மைக்கில் பேச ஆரம்பித்த உடனேயே விசில் பறக்கிறது... அம்மா அப்படியே அம்மா மாதிரியே இருக்கீங்க அம்மா என்று தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்புகின்றனர்.
கடந்த 5 நாட்களாகவே தியாகராய நகர் பகுதியில் உள்ள சிவஞானம் சாலையில் அதிமுக தொண்டர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாதவர்கள் கடந்த சில தினங்களாக சென்னை தியாகராய நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

வருங்கால தமிழகமே
வருங்கால தமிழக முதல்வரே என்று தீபாவை ஆதரித்து அவரது வீட்டு முன்பு பேனர்களை வைத்தனர். அப்படி வைக்கப்பட்டிருந்த பேனர்களை நேற்றிரவு போலீசார் அகற்றினார்கள். இன்று காலையில் தீபா வீட்டிற்கு வந்த ஆதரவாளர்கள் இதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

சாலை மறியல்
பேனரை அகற்றியதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தியாகராய நகர் வெங்கடநாராயணசாமி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.

நாங்கள் வளர்வோம்
மாநகராட்சியின் அனுமதி பெற்று விளம்பர பலகை வைக்க வேண்டும். அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதால் பேனர் அகற்றப்பட்டது என்று விளக்கம் அளித்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். தீபா வீட்டு முன்பு இன்று கூடிய ஆதரவாளர்கள் கூறும்போது, எங்களை அழிக்க நினைத்தால் நாங்கள் வளர்ந்து கொண்டே இருப்போம் என்று ஆவேசமாக கூறினார்கள்.

தீபா பேச்சு
தீபா வீட்டின் முன்பு இன்று திரண்ட ஆதரவாளர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினார்கள். இன்று கூடிய மக்கள் மத்தியில் பேசிய தீபா, எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவை வணங்கி விட்டு பேச்சை தொடங்கினார்.

பொறுமையுடன் இருங்கள்
அம்மாவை இழந்த துக்கத்தில் இருந்து இன்னமும் மீளவில்லை. சிறிதுகாலம் பொறுமையுடன் இருங்கள். விரைவில் நான் எனது முடிவு அறிவிப்பேன். எம்.ஜி.ஆர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தீபா கூறவே தொண்டர்கள் உற்சாகத்துடன் கர ஒலி எழுப்பினர்.

உங்களுக்காக நான்
ஜெயலலிதா பேசும்போது மக்களால் நான்... மக்களுக்காக நான் என்று கூறி பேசுவார். இன்று தீபா பேசும் போது உங்களுக்காக நான் என்று கூறி பேச்சை நிறுத்தினார். அப்போது தொண்டர்கள் கர ஒலி எழுப்பி விசிலடித்தனர். அம்மா மாதிரியே பேசுறீங்கம்மா என்று குரல் எழுப்பினர். அப்போது தீபா மீண்டும் உங்களுக்காக நான் பணியாற்ற காத்திருக்கிறேன் என்று கூறி உரையை முடித்தார்.

எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அறிவிப்பு
தீபா வீட்டு முன்பு நாளுக்கு நாள் தொண்டர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தீபா எப்போது தனது முடிவை அறிவிக்கப் போகிறாரோ? எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17ஆம் தேதி தனது முடிவை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications