ஜெ.வை சந்திக்கும் திட்டம் இல்லை, சந்திக்கும் நிலையிலும் அவர் இல்லை... ஸ்டாலின் #jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தன்னை யாரும் வந்து சந்திப்பதை விரும்புவதில்லை. சந்திக்கும் நிலையிலும் அவர் இல்லை. எனவே அவரை சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே தெளிவாக கருத்து தெரிவித்துள்ளார் என்றும் கூறியுள்ள ஸ்டாலின், இரண்டாம் நிலையில் உள்ள தலைவர்களோ அமைச்சர்களோ, தலைமைச் செயலாளரோ உண்மை நி்லவரத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் இதுவரை பரவும் வதந்திகளைக் குறைக்கும் வகையில் எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை என்பது வேதனைக்குரியது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் அவர் அளித்த பேட்டியிலிருந்து....
ஜெயலலிதாவை சந்திப்பீர்களா?
இப்போது அவர் யாரையும் சந்திப்பதில்லை. சந்திக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக செய்தி. அதனால், அந்த முயற்சியில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதி மிகத் தெளிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆட்சிப் பொறுப்பில் முதல்வருக்கு அடுத்த நிலையில் இருக்கக் கூடிய அமைச்சர்களோ அல்லது தலைமைச் செயலாளரோ முதல்வரின் உடல்நிலை குறித்து முறையான விளக்கம், உண்மை நிலவரத்தைச் சொல்ல வேண்டும்.
வதந்திகள் குறையவில்லையே
இதுபோல விளக்கம் சொன்னால், நாட்டில் பரவக் கூடிய வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கும் என்று பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால், இதுவரையில் அந்த நிலையை அவர்கள் எடுக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.
உண்ணாவிரதப் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு எடுத்திருக்க கூடிய முடிவை கண்டிக்கும் வகையில், நாளை மறுநாள் தஞ்சையில் மிகப் பெரிய உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். அதன் மூலமாக எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க இருக்கிறோம்.
உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்திருந்த வழக்கிற்கு நேற்று தீர்ப்பு வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. அந்த வழக்கை பொறுத்தவரையில் மின்னணு வாக்கு இயந்திரங்களை பயன்படுத்தி, வெளிமாநில அதிகாரிகளைக் கொண்டு முறையாக தேர்தலை நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறோம். அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த ஆட்சி இப்படி செய்யும் என்று தான், நாங்கள் முன்னெச்சரிக்கையாக இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறோம். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் நீதிமன்றத்தை அணுகவில்லை. தேர்தலை ஒழுங்காக நடத்த வேண்டும் என்று தான் நீதிமன்றத்திற்கு சென்றோம்.
திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம்?
இது, நீங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டிய கேள்வி. ஆனால், அவர் இப்போது உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கின்ற காரணத்தால், அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் நிதித்துறை அமைச்சரையோ, பொதுப்பணித்துறை அமைச்சரையோ நேரில் சந்தித்து இதற்கான விளக்கத்தை கேட்டு நீங்கள் தான் மக்களிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.