சசிகலா புஷ்பா ஜாமீன் மனு மீது 2 மணி நேரம் பரபரப்பு வாதம்.. தீர்ப்பு ஒத்திவைப்பு
மதுரை: பாலியல் புகார் வழக்கில் சசிகலா புஷ்பா உள்பட 4 பேரின் மீதான முன்ஜாமீன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராஜ்யசபா எம்.பி. பதவியை ஒருபோதும் ராஜினாமா செய்யமாட்டேன் என்று சசிகலா புஷ்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன் ஜாமீன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரில் ஆஜராக சிங்கப்பூரில் இருந்து நள்ளிரவில் சென்னை திரும்பிய அவர் சென்னை விமான நிலையத்தில் இதனைத் தெரிவித்தார்.
அதிமுக சார்பில் ராஜ்யசபாயாக தேர்வு செய்யப்பட்ட சசிகலா புஷ்பா, சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பியான திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் சென்னை வந்து, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுபற்றி விளக்கம் அளித்தார்.
அதற்கடுத்த நாள் ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா தன்னை அடித்ததாகவும், எம்பி பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாகவும் புகார் தெரிவித்தார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு வழங்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பாலியல் புகார்
சசிகலா புஷ்பாவின் வீட்டில் உதவியாளராக பணிபுரிந்த 2 பேர் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்தனர். இந்த வழக்கில், கைது செய்யப்படுவதை தவிர்க்கும் விதமாக, சசிகலா புஷ்பா முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

முன்ஜாமீன் மனு
இது போலியான ஜாமீன் மனு எனக் கூறி, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அன்றைய தினத்தில் ஜாமீன் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால், தமிழகத்தில் சென்று ஆஜராக அச்சம் இருப்பதாகவும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரனையில், சசிகலா புஷ்பா வரும் 29ம் தேதி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக வேண்டும். அதே நேரத்தில் அவரை கைது செய்வதற்கு 6 வார காலம் தடை விதிக்கப்படுகிறது என்றும் உத்தரவிடப்பட்டது.

ராஜினாமா செய்யமாட்டேன்
அதன்படி ஞாயிறு நள்ளிரவு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், எம்பி. பதவியை ஒருபோதும் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், தன்மீதான நடவடிக்கைகளை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். தம்மை யாரும் இயக்கவில்லை என்றும், எந்த மிரட்டலுக்கும் அஞ்சப்போவதில்லை என்றும் கூறினார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாகவும் கூறிய சசிகலா புஷ்பா பின்னர் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜர்
சசிகலா புஷ்பா தனது முன்ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று நேரில் ஆஜரானார். மனுவை நீதிபதி வேலுமணி விசாரித்தார். அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சசிகலா புஷ்பா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார். 2011ல் நடந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து 5 வருடம் கழித்து புகார் அளித்தது ஏன் என்று சசிகலா புஷ்பா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இரு தரப்பும் சுமார் 2 மணி நேரம் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதி வேலுமணி, தீர்ப்பை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications