ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் பற்றி பேச அனுமதி மறுப்பு: திமுக வெளிநடப்பு
சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரியை சஸ்பெண்ட் செய்வது என்று சொன்னால், அதில் என்ன நடத்திருக்கிறது என்பதை இந்த நாட்டு மக்களுக்கு, இந்த அரசு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்,
தமிழக சட்டப்பேரவையில், இன்று வருவாய் , இயற்கைச் சீற்றங்கள் துயர் தணிப்புத்துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இதில், கேள்வி நேரம் முடிந்ததும், முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட குறித்த விளக்கத்தை பேரவையில் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திப் பேசினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த, சபாநாயகர் தனபால், அதிகாரிகளின் பெயரை சட்டசபையில் குறிப்பிடக்கூடாது என்று கூறி, அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்த விளக்கத்தை கேட்டதற்கு, அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு பேசக்கூடாது என்று கூறி அவைக்குறிப்பில் இருந்து அதை சபாநாயகர் நீக்குகிறார்
முதல்வர் ஜெயலலிதா, இதே கூட்டத்தொடரில், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் பெயரை சொல்லி அவையிலே பதிவு செய்கிறார். ஆக, முதல்வருக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா என்றுதான் வெளிநடப்பு செய்துள்ளோம்.
ஒரு அதிகாரியை அதுவும் ஐ.ஏ.எஸ். அதிகாரியை சஸ்பெண்ட் செய்வது என்று சொன்னால், அதில் என்ன நடத்திருக்கிறது என்பதை இந்த நாட்டு மக்களுக்கு, இந்த அரசு தெரிவிக்க வேண்டும். அந்த உரிமையில்தான் சட்டசபையில் இந்தக் கேள்வியைக் கேட்டோம். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட காரணத்தால்தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.