ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. பட்டியல் ரெடி
ஐஏஎஸ் அதிகாரிகள் விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றல் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நல்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்டுகள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல் பூரணமாக குணம் அடைந்து விட்டதாக அப்போலோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழக அரசு நிர்வாகத்தை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கவனித்து வருகிறார்.
இதனிடையே பல்வேறு துறைகளின் ஆய்வுக்கூட்டங்களை சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறார் தலைமைச்செயலாளர் ராமமோகனராவ். இந்த கூட்டங்களில் நிதியமைச்சர் பன்னீர்செல்வமும் கலந்துகொண்டுள்ளார். கூட்டங்களில் கேள்வி கேட்பதும் உத்தரவிடுவதும் ராமமோகனராவ் தான்.
இந்த சூழலில், ராவும் பன்னீர்செல்வமும் ஆலோசித்து 10-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றும் பட்டியலை தயாரித்துள்ளனர். இந்த பட்டியல் அப்பல்லோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒப்புதல் கிடைத்ததும் மாற்றல் பட்டியல் ரிலீஸ் ஆகும் என்கிறது கோட்டை தகவல்.