திமுக ஆட்சியில் கலர் டிவி வழங்கியதில் ரூ.3,000 கோடி ஊழல்: நாஞ்சில் சம்பத்

கடலூர் மாவட்ட அண்ணா கிராமம் ஒன்றிய அதிமுக சார்பில் நல்லூர்பாளையத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில்,
1967ம் ஆண்டு அண்ணா தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து காங்கிரஸை விரட்டி அக்கட்சிக்கு முடிவுரை எழுதினார். அண்ணா, புரட்சித் தலைவர் வழியில் வந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா விரைவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் இருந்தே காங்கிரஸை விரட்டி அவர்களுக்கு முடிவுரை அமைக்கவிருக்கிறார்.
கருணாநிதிக்கு அண்ணாவின் பெயரைக் கூட சொல்லத் தகுதியில்லை. அப்படிப்பட்டவர் அண்ணாவின் இதயத்தை இரவல் கேட்டார். ஆனால் அண்ணா வழியில் வந்த அம்மாவுக்கோ அண்ணாவின் இதயம் இயற்கையாகவே அமைந்துள்ளது.
தமிழ்மொழிக்காக நான் வாழ்கிறேன் என்று கூறி கனிமொழிக்காக சோனியாவின் காலடியில் மண்டியிடுகிறார். மேலும் சோனியாவை மணிமேகலை என்கிறார். சுயநலத்திற்காக கருணாநிதி எதை வேண்டுமானாலும் பேசுவார்.
அம்மாவின் திட்டங்கள் வாழும் திட்டங்கள். திமுக ஆட்சியில் கலர் டிவி வழங்குகிறேன் என்ற பெயரில் ரூ.3,000 கோடிக்கு ஊழல் நடந்தது. அவர்களின் அனைத்து திட்டங்களிலும் ஊழல்.
ஆனால் தற்போது இலங்கை தமிழர்களுக்கு தான் தான் அத்தாரிட்டி என்பது போல் அவர் பேசி வருகிறார். அவர் ஆட்சியில் இருந்த போது ஒன்றையும் செய்யவில்லை. 1.70 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொலை குற்றவாளியாக அறிவிக்க, இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆனால் இலங்கையில் தனி ஈழம் அமையும் என்றார்.












Click it and Unblock the Notifications