ரெட்டெல வேற இல்ல... ஒருவேளை கங்கை அமரன் எம்எல்ஏவாகிட்டா... இப்படியெல்லாம் நடக்குமோ?
ஒரு வேளை கங்கை அமரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் மக்களுக்கு என்னென்ன புது திட்டங்கள் கொண்டு வருவார்ன்னு ஒரு ஜாலி கற்பனை. இது வெறும் நகைச்சுவைக்காகவே. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.
1. ஆர் கே நகர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டைக்குப் பதிலாக இரண்டு வாழைப்பழங்கள் கொடுக்க ஆவண செய்யப்படும். (உண்மையில் ஒன்றுதான் கொடுக்கப்படும்)

2. நில அபகரிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு ஒரு ஆசிரமம் அமைக்கப்படும். வீட்டோடு இடத்தைப் பறிகொடுத்தவர்களுக்கு சிறப்பு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
3. தொகுதியில் உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் கன்றுக்குட்டியுடன் கூடிய பசுமாடும், எங்க ஊரு பாட்டுக்காரன் ஆடியோ சிடியும் வழங்கப்படும். மாடுகளை மேய்ப்பதற்காக பீச் ஓரமாக பூங்காக்கள் அமைக்கப்படும்.
4. மாட்டை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.
5. ராமராஜன் தலைமையில் மாடு மேய்க்கும் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்படும். மாட்டிடம் உதை வாங்காமல் பால் கறக்க சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
6. மாட்டுப் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மாட்டுப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக கங்கை அமரன் தலைமயில் "பட்டிக்காடா பட்டனமா" நடன நாட்டிய நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்தப்படும்.
7. ஆர்.கே நகரிலிருந்து சன் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரும் நபர்கள் பாடுவதற்கு வாயைத் திறக்கும் முன்னரே நேரடியாக 30 மதிப்பெண்கள் வழங்கப்படும். வைல்ட் கார்டு ரவுண்டுகள் பைபாஸ் செய்யப்படும்.
8. ஆர்.கே. நகரில் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு "பூச்சாண்டி"யை காட்டி சோறு ஊட்ட ப்ரேம்ஜியின் ஃப்ரேம் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று வழங்கப்படும்.
9. வெங்கட் ப்ரபு இயக்கும் படங்களின் முதல் காட்சிக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும். வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு கை கால்கள் கட்டப்பட்டு வலுக்கட்டாயமாக இரண்டு மூன்று முறை அதே படம் காண்பிக்கப்படும்
10. சென்னை-28 திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தின் கதை ஆர்.கே. நகரை மையமாக வைத்து அமைக்கப்படும். (படத்தின் பெயர் : சென்னை 28 -3, A Venkat Prabhu தொகுதி)
11. திருவிழாக் காலங்களில் வெங்கட் ப்ரபு &ப்ரேம்ஜி தலைமையில் நடிகை சோனா சிறப்பு விருந்தினராகப் பங்குபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்.
12. கட்ட கடைசியாக, எஸ்பிபிக்கென்று ஒரு கச்சேரி வைத்து, அவர் மனசு குளிர இசைஞானி இளையராஜாவை கண்டபடி திட்டி மகிழும் ஒரு திட்டமும் உண்டு!
- முத்து சிவா












Click it and Unblock the Notifications