விசாரணைக்கே வராத கீதாலட்சுமி.. ஐடி சம்மனை ரத்து செய்ய கோரி ஹைகோர்ட்டில் மனு
வருமான வரித்துறையினர் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரி சென்னை ஹைகோர்ட்டில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: வருமான வரித்துறையினர் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரி சென்னை ஹைகோர்ட்டில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பணம் வினியோகிப்பதாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறை அலுவலர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடு, நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது.

திடுக் தகவல்கள்
அப்போது ரூ.89 கோடி பணம் மற்றும் பல்வேறு உண்மைகள் அடங்கிய ஆவணங்கள், ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா குறித்த உண்மை ஆவணங்கள் என சிக்கியது. மேலும் அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் கையெழுத்திட்டதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த சோதனை அறிக்கையின் பேரில் தேர்தல் ஆணையம் இடைதேர்தலை ரத்து செய்தது.

புலனாய்வு விசாரணை தொடக்கம்
இந்த நிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி முன்னாள் எம்.பி.சிட்லபாக்கம் ராஜேந்திரன், விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டோர் கால்மணி நேர இடைவெளிகளில் துணை இயக்குநர் ராஜமாணிக்கம் முன்பு ஆஜராகினர்.

கீதா லட்சுமி ஆஜராகவில்லை
எனினும் கீதா லட்சுமி ஆஜராகவில்லை. வருமான வரித்துறையினரின் சம்மனை ரத்து செய்ய கோரி சென்னை ஹைகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதால் கீதா லட்சுமி விசாரணைக்கு ஆஜராகவில்லை என வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

ஐடி-க்கு அதிகாரமில்லை
அந்த மனுவில், எனக்கு சம்மன் அனுப்ப வருமான வரித்துறையினருக்கு அதிகாரமில்லை. எனது வீட்டில் இருந்து பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. தங்க நகைகள், வெள்ளி பொருள்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார். தான் ஆஜரானால் பல்வேறு உண்மைகள் வந்துவிடக் கூடும் என்பதால் அவர் ஆஜராவதை தவிர்ப்பதாக தகவல்கள் வருகின்றன.

மலைபோல் ஊழல்
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், கீதாலட்சுமியும் நண்பர்கள். இவர்கள் இருவரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கை, அரசு மருத்துவர்கள், செவிலியிர்கள் பணி, இடமாற்றம், டென்டர் விடுவது உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறையே மலைக்கும் அளவுக்கு சொத்து சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு வேளை கீதா லட்சுமி ஆஜரானால் முறைகேடுகளில் யார் யாருக்கு தொடர்பு உள்ளிட்ட கேள்விக்களுக்கான உண்மைகளை கக்கக் கூடும் என்பதால் அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications