தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்தனர்.. ஓபிஎஸ் பகீர்!
சசிகலா குறித்து ஒரு சதவீதம் மட்டுமே கூறியுள்ளேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சசிகலா குடும்பத்தினர் கடும் நெருக்கடியை கொடுத்தனர் என்றும் வேறு யாராவதாக இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சசிகலா குறித்து ஒரு சதவீதம் மட்டுமே கூறியுள்ளேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி எம்.பி.பார்த்திபன், முன்னாள் எம்.பி சையதுகான் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
தினகரனிடம் பேசக்கூடாது
கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,
தினகரனிடம் பேசக்கூடாது என ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். தினகரனுடன் தொடர்பில் உள்ளீர்களா என்றும் ஜெயலலிதா தன்னிடம் அடிக்கடி கேட்டு வந்தார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
நீங்களாவது விசுவாசமாக இருங்கள்
தான் உயிருடன் இருக்கும் வரை தினகரனை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என ஜெயலலிதா கூறியிருந்தார் என்றும் அவர் கூறினார். நீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என்று ஜெயலலிதா தன்னிடம் கூறினார் என்றும் தெரிவித்தார்.
தோற்கடிக்க சதி
2016ஆம் ஆண்டு தேர்தலில் சசிகலா குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தான் ஜெயலலிதா தனக்கு சீட் கொடுத்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேர்தலில் தன்னை தோற்கடிக்க தினகரன் உள்ளிட்டோர் சதி செய்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
மீண்டும் டீ கடையில்
ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த காரணத்தினாலேயே சசிகலா குடும்பம் தன்னை துரோகி என கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். மீண்டும் தன்னை டீ கடையில் அமர வைப்பதாக தினகரன் பேசி வருகிறார் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
உடுத்திய உடையோடு
தேர்தலில் தோற்கடித்து உடுத்திய உடையோடு வீட்டிற்கு அனுப்புவேன் என சசிகலா கூறியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார். சசிகலா குறித்து ஒரு சதவீதம் மட்டுமே கூறியுள்ளேன் என்ற ஓ.பன்னீர்செல்வம் கோபம் வரும்போது மீதியயை கூறுவேன் என்றார்.
தற்கொலை செய்திருப்பார்கள்
தான் முதல்வராக இருந்தபோது சசிகலா குடும்பத்தினர் கடும் நெருக்கடியை கொடுத்தனர் என்றும் வேறு யாராவதாக இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் என்றும் அவர் கூறினார். கட்சி நலனுக்காக அனைத்தையும் தாங்கிக்கொண்டேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.