2 சிலிண்டர் இருக்கா.. இனி உங்களுக்கு ரேஷனில் அரிசி கிடையாது.. வருகிறது புதிய திட்டம்
2 சிலிண்டர்கள் வைத்துள்ளவர்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி நிறுத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளது.
சென்னை: 2 சிலிண்டர்கள், கார், பைக் வைத்திருத்திருக்கும் குடும்பங்களுக்கு இனி ரேஷன் கடைகளில் அரிசி வழங்குவது விரைவில் ரத்து செய்ய தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது. இதை அமல்படுத்துவதன் மூலம் ஒரு கோடிக்கும் ரேஷன் அட்டைதாரர்கள் பாதிக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் 33, 973 ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இதன் மூலம் இலவச அரிசி, குறைந்த விலையில் துவரம், உளுந்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷனில் வழங்கப்படும் பொருட்களை நம்பியே பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் நெருக்கடியால் தமிழக அரசு இந்த முடிவிற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு நாடு முழுவதும் உணவுப்பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த முயற்சி எடுத்தது. இதனை ஏற்க தமிழக அரசு தொடக்கத்தில் எதிர்ப்பு காட்டியது. ஆனால் தற்போது, மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் தமிழக அரசு இணைந்துள்ளது.

இரு மடங்கு விலை
தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் அரிசியின் விலையை மத்திய அரசு உயர்த்தியதால், ஒரு கிலோ அரிசி ரூ.8.30 முதல் ரூ.21.40 வரை அதிகரிக்கப்பட்டது. இந்த திடீர் விலை உயர்வால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை அதிகரித்தது. மேலும், இருமடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

அரிசி ரத்து
தற்போது, தமிழக அரசு அரிசிக்காக மட்டும் ரூ.2,700 கோடி செலவிடுகிறது. இந்த நிதிச் சுமையை ஈடுகட்ட தமிழகத்தில் 60 சதவீத குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அரிசியை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2 சிலிண்டர்
இதன்படி, 2 சிலிண்டர்கள், கார், பைக், ஏசி வைத்திருக்கும் குடும்பத்திற்கு ரேஷன் அரிசியை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உணவுப்பொருள் வழங்கல்துறை ரகசிய சர்வே ஒன்றை எடுத்து வருகிறது. அதில் கிடைத்துள்ள பட்டியலை வைத்து ரேஷன் கார்டை 2 பிரிவுகளாக பிரித்துள்ளனர்.

ரகசிய கணக்கெடுப்பு
சிலிண்டர், ஏசி, பைக், கார் வைத்திருப்பவர்கள் முதல் பிரிவாகவும், இதில் எதுவும் வைத்திராதவர்கள் இரண்டாவது பிரிவாகவும் பிரித்துள்ளனர். இதற்காக 3 படிவங்கள் தயாரிக்கப்பட்டு வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

யாரிடம் என்ன உள்ளது
முதல் படிவத்தில், ஒரு குடும்பத்தில் யாருக்கெல்லாம் ஆதார் கார்டு உள்ளது என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. 2வது படிவத்தில் ஒரு வீட்டில் ஏசி, கார், பைக், 2 சிலிண்டர் உள்ளதா என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. 3வது படிவத்தில் இதுவரை ஆதார் கார்டு வாங்காதவர்கள் குறிப்பிட்ட முகவரின் வசித்து வருகின்றார்களா என்ற விவரமும் பதிவு செய்யப்படுகிறது.

2 கோடி கார்டுகள் பாதிப்பு
ரகசியமாக எடுக்கப்பட்டு வரும் இந்தக் கணக்கெடுப்பின் மூலம், அரசி வாங்குவதற்கு ஆப்பு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடி அட்டைத் தாரர்களில் சுமார் 1.20 கோடி கார்டுகளுக்கு அரிசியை ரத்து செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

சென்னையில் எவ்வளவு பாதிப்பு
சென்னையை பொருத்தவரை 12 லட்சம் பேருக்கு அரிசி கிடைப்பது நிறுத்தப்படும் என்று தெரிய வருகிறது. சென்னையில் 20 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் சுமார் 60 சதவீதம் கார்டுகளுக்கு அரிசி கிடைப்பது ரத்தாக வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications