தஞ்சை பெரிய கோயிலில் பொன்.மாணிக்கவேல் திடீர் ஆய்வு.. பக்தர்கள் வெளியேற்றம்.. பரபரப்பு
தஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Recommended Video
தஞ்சை: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையில் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.
தமிழகத்தில் பழமையான கோயில்களில் இருந்து சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்ததும், அதில் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியதும் வெளியே தெரியவந்தது.
சிக்கிய சிலைகள்
இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டு, இதுகுறித்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி, பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை செய்யப்பட்டது. இதில் சில தொழிலதிபர்கள் கையும் களவுமாக சிக்கினார்கள். ஐம்பொன் உள்ளிட்ட ஏராளமான சிலைகளும் மீட்கப்பட்டன.
89 சிலைகள் பறிமுதல்
தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு தீவிரம் காட்டி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூட சென்னையில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் வீட்டிலிருந்து 89 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சிலைகள் எல்லாமே நந்தி சிலைகள்தான்.
தஞ்சாவூர் பெரிய கோயில்
அத்தனை சிலைகளையும் கும்பகோணத்துக்கு கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், அவை எல்லாமே நந்தி சிலைகள் என்பதால் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குள் ஆய்வு மேற்கொள்ள முடிவெடுத்தனர்.
பக்தர்கள் வெளியேற்றம்
அதன்படி இன்று பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கோயிலுக்குள் ஆய்வு நடத்தினர். அதன் காரணமாக கோயிலுக்குள் இருந்த அனைத்து பக்தர்களும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பெரிய கோயிலின் முக்கிய கதவுகளும் மூடப்பட்டது. இதனையடுத்து 50 பேர் கொண்ட சிலை கடத்தல் தடுப்பு குழு ஆய்வில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.