அப்படி என்ன தப்பா சொல்லிட்டாங்க?: ஐஐடி மாணவர்களுக்கு ராமதாஸ் ஆதரவு
சென்னை: ஐ.ஐ.டி.யின் அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டம் வெளியிட்ட துண்டறிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எதுவும் இல்லை. ஏற்கனவே அரசியல் மற்றும் பொதுத்தளங்களில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களைத் தான் மாணவர் வட்டம் துண்டறிக்கையாக வெளியிட்டிருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) செயல்பட்டு வந்த அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்தை ஐ.ஐ.டி. நிர்வாகம் ரத்து செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது.

அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்து துண்டறிக்கை வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலம். சமூகத்தை பாதிக்கும் எந்த ஒரு விஷயம் குறித்தும் மாணவ சமுதாயத்திடமிருந்து எதிர்ப்பு எழுவது இயற்கை. மாணவர் வட்டம் வெளியிட்ட துண்டறிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எதுவும் இல்லை. ஏற்கனவே அரசியல் மற்றும் பொதுத்தளங்களில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களைத் தான் மாணவர் வட்டம் துண்டறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.
இதைக்கூட மத்திய அரசாலும், ஐ.ஐ.டி. நிர்வாகத்தாலும் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தான் கருத வேண்டியிருக்கும். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக அமைந்துவிடும். மாணவர்கள் உள்ளிட்ட எந்த தரப்பினரின் கருத்துரிமையையும் பறிப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, பறிக்கப்பட்ட அங்கீகாரத்தை அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டத்திற்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications