அரசியல்சாசனம் பற்றி பேச பாஜகவுக்கு மட்டுமே தகுதி உள்ளது: இல.கணேசன்
சென்னை: இதிகாசங்களிலேயே சான்றுகள் இருப்பதுடன், பாரம்பரியமும் இருப்பதால் அரசியல்சாசனம் பற்றி பேச பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே தகுதி உள்ளது என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே-வின் ‘டாக்டர் அம்பேத்கர் தீட்டிய இந்திய அரசியல் சட்டம்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புத்தகத்தை வெளியிட, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் அதனைப் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் எச்.வி.ஹண்டேவின் 88-வது பிறந்தநாளையொட்டி அவரும், அவருடைய மனைவி சாந்தாவும் கவுரவிக்கப்பட்டனர்.

அப்போது பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "தாழ்த்தப்பட்ட சமுதாயம் மேம்படுவதற்கு டாக்டர் அம்பேத்கர் பாடுபட்டுள்ளார். அவர் எழுதிய சட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக வெளிநாடுகளில் உள்ள சட்டங்களில் ஒரு இறுக்கம் இருக்கும். ஆனால் நம் நாட்டு சட்டத்தில் நெகிழ்ச்சி இருக்கிறது. அதற்கு காரணம் நம் நாட்டின் பண்பாடும், மண்ணும் ஒரு காரணமாகும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேசுகையில், "அரசியல்சாசனம் பற்றி பேச யாருக்கு தகுதி இருக்கிறது? என்பது குறித்து பலர் பலவிதமான கருத்துகளை கூறிவருகின்றனர். ஏ.ஓ.யூம் தொடங்கிய காங்கிரஸ் கட்சி இப்போது இல்லை, தேர்தலுக்காக இந்திரா காந்தியால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தான் இப்போது உள்ளது.
எனவே இவர்களுக்கு அரசியல்சாசனம் பற்றி பேச தகுதி இல்லை. ஆனால் இதிகாசங்களிலேயே சான்றுகள் இருப்பதுடன், பாரம்பரியமும் இருப்பதால் அரசியல்சாசனம் பற்றி பேச பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே தகுதி உள்ளது'' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications