பெங்களூரு விமான நிலைய சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் - இளையராஜா
சென்னை: விமான நிலையங்களில் சோதனை நடத்துவது வழக்கமான ஒன்று தான். பெங்களூரு விமான நிலையத்தில் நடந்ததை பெரிது படுத்த வேண்டாம் என இசையமைப்பாளர் இளையராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா மங்களூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, இளையராஜாவை தடுத்து நிறுத்திய அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரது பையை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, பையில் தேங்காய், விபூதி போன்ற பிரசாதப் பொருட்கள் இருந்ததால், அவற்றை அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, பிரசாதப் பொருட்களை அங்கேயே விட்டுச் செல்ல அதிகாரிகள் நிர்ப்பந்தித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த இளையராஜா, பிரசாதப் பொருட்களை விட்டுச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இளையராஜாவை அங்கிருந்த அதிகாரிகள் காத்திருக்க வைத்தனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து இளையாராஜா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், விமான நிலையங்களில் சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். இதை விட கடுமையான பிரச்சினைகளை எல்லாம் நான் சந்தித்து இருக்கிறேன். அதிகாரிகள் அவர்களின் பணியை செய்தார்கள். நான் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
என்னை சோதனை செய்து காத்திருக்க வைத்ததால் நான் ஒன்றும் சிறுமை அடையவில்லை. நான் எப்பவும் ராஜா தான். எனவே இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று இளையராஜா கூறினார்.












Click it and Unblock the Notifications