கொள்ளை போகும் அமராவதி.. தவிக்கும் தாராபுரம்.. வறளப் போகும் பேரபாயம்
Recommended Video

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றை மணல் கொள்ளையர்கள் அநியாயத்திற்கு சுரண்டி வருகின்றனர். இதனால் மணல் கொள்ளை போவதோடு, குடிநீர் ஆதாரமான அமராவதி ஆறும் அநியாயத்திற்கு பாதிக்கப்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.
தாராபுரம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் அமராவதி ஆற்றில் கேள்வி கேட்பாரின்றி தொடரும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. அதிகாரிகள் அறிந்திருந்தும் தடுத்திட முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பழைய மற்றும் புதிய அமராவதி பாசன பகுதி விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாகவும் அமராவதி ஆறு இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு வரை தாராபுரம் தில்லாபுரியம்மன் கோவில், வடுகபாளையம், ஊதியூர் அருகே உள்ள நிழலிக்கரை, கவுண்டையன்வலசு, ஆத்துக்கால்புதூர், கருக்கம்பாளையம், பெரமியம், எரிசனம்பாளையம் பகுதிகளில் ஆற்றிலிருந்து மணலை சிறு வாகனங்கள் மூலம் எடுத்து வந்து அதை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரியில் மாற்றி தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்பட்டு வந்தது.

தற்போது தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் அருகே எடைக்காடு என்ற கிராமத்தில் உள்ள எடைக்காடு என்ற தீவு இடத்தில் மணல் குவாரி அமைத்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி மணல் குவியல் குவியலாக ஆற்று மணலை குவித்து வைத்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் உள்ள அமராவதி ஆறு மணலை சேமித்து வைத்துள்ளனர்.
இந்த மணல் கடத்தல் அதிகாரிகளின் துணையோடு நடைபெற்று வருவதாகத் தெரிகிறது எடைக்காடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் தினமும் அமராவதி ஆற்று மணலை திருட்டுத்தனமாக அள்ளிச் செல்கின்றனர் பொதுமக்கள் அந்த வழியாக செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர்.

இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவேண்டிய புஞ்சை தலையூர் கிராம அதிகாரிகள் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

பொதுமக்களின் வாழ்வாதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் பழமை வாய்ந்த அமராவதி ஆறு கொஞ்சம் கொஞ்சமாக பாலைவனமாக மாறிவருவதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.












Click it and Unblock the Notifications