மாவட்டச் செயலாளர்கள் vs மகளிரணியினர்... அதிமுகவில் தொடரும் லடாய்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அதிமுக நிர்வாகிகள் தங்கள் வீட்டு பெண்களை தேர்தலில் நிறுத்துவதாகவும், மகளிரணியினருக்கு உரிய மரியாதை தரவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளதால் கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்தத் தேர்தல் மூலம் அதிகளவில் பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சீட் வழங்கும் விவகாரத்தில் அதிமுகவில் மகளிரணியினருக்கும், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் இடையே கடந்த ஒரு மாத காலமாக லடாய் தொடர்கிறது.

பெண்கள் கோட்டா
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இந்த மசோதா கொண்டுவரப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

பெண்களுக்கு பதவி
இதுவரை உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக இந்த உள்ளாட்சித் தேர்தலில் 50 % இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, உள்ளிட்ட அமைப்புகளில் அதிகளவில் பெண்கள் பதவிக்கு வரமுடியும் என சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடரும் லடாய்
அதிமுகவில் மகளிரணி வலுவாக உள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட ஏராளமான மகளிரணி நிர்வாகிகள் விருப்பமனு அளித்துள்ளனர். ஆனால், மாவட்டச் செயலாளர்களும், லோக்கல் நிர்வாகிகளும் பெண்களுக்கான கோட்டாவில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை போட்டியிட வைக்க முயற்சிப்பதால் மகளிரணியினர் இது தொடர்பான புகாரை தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

அறிவுரை
இதனிடையே மாவட்டச் செயலாளர்கள் தரப்பை தொடர்பு கொண்ட அதிமுக தலைமை, மகளிரணியில் தகுதி பெற்ற வேட்பாளர்கள் இருந்தால் புறக்கணிக்காமல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்குமாறும், அனைவரையும் அனுசரித்துச் செல்லுமாறும் சமாதானம் செய்து வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications