நெடுவாசலில் 17ஆவது நாளாக நீடிக்கிறது போராட்டம்... கும்மியடித்து பெண்கள் நூதன போராட்டம்!
நெடுவாசல் போரட்டத்தில் போராட்ட யுக்தியாக பெண்கள் கும்மியடித்து போராடி வருகின்றனர். இன்று பெண்கள் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 17ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று போராட்டம் பெண்கள் தலைமையில் நடந்து வருகிறது.
நெடுவாசலில் 17ஆவது நாளாக நடந்து வரும் போராட்டத்தில் மக்கள் திரளாக அமர்ந்திருக்கின்றனர். இன்று போராட்டம் பெண்கள் தலைமையில் நடந்து வருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக பெண்கள் குழுவாக சேர்ந்து கும்மியடித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.
இந்த போராட்ட யுக்தி, அங்கு இருப்பவர்களை உற்சாகப்படுத்தி தீர்வு கிடைக்கும் வரை போராடும் உந்துதலைக் கொடுக்கிறது. போராட்டத்தின் பெரும்பாதியாக பெண்கள் தொடர்ந்து இருக்கிறார்கள்.
நெடுவாசலில் நேற்ரு மழை பெய்த போதும் கூட மக்கள் கொஞ்சம் கூட கலையாமல் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
மேலும், போராட்டத்தின்போது ஒரு குழுவினர் பறையடித்து, நடனமாடி தங்கள் வலுவான போராட்டத்தை நிரூபித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.