சாதனை படைத்தார் தினகரன்.. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அபார வெற்றி! அதிமுக, திமுக அதிர்ச்சி
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், 40707 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக இடைத் தேர்தல் ஒன்றில் சுயேச்சை வெற்றி பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்றின் வாக்கு எண்ணிக்கையில் தொடங்கி, இறுதி சுற்று வரை தினகரனே முன்னிலை பெற்று வெற்றிக் கனியை பறித்துள்ளார். தினகரனின் இந்த வெற்றி, ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஆகிய கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவால் காலியாக இருந்த ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. மொத்தம், 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மொத்தம் 1,76,885 வாக்குகள் பதிவாகின

19 சுற்றுகள்
இதையடுத்து ராணிமேரி கல்லூரியில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் 19 சுற்றுகளாக வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 16வது சுற்று முடிவுகளிலேயே தினகரன் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. 16 சுற்றுகள் முடிவில் தினகரன் 76701 வாக்குகளை பெற்றிருந்தார். அவர் வாக்கு வித்தியாசம் 35175 என்ற அளவில் இருந்தது.

சரிபாதி வாக்குகள்
19 சுற்றுகள் முடிவில் தினகரன் மொத்தம் 89013 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். பதிவான வாக்குகளில் சரிபாதி இவர் ஒருவருக்கே கிடைத்துள்ளது. தினகரன் வாக்கு சதவீதம், 50.32 ஆகும். இதன் மூலம் 2வதாக வந்த அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட 40707 வாக்குகள் அதிகம் பெற்று தினகரன் வெற்றி வாகை சூடினார்.

பிற கட்சியினர்
மதுசூதனன் ( அதிமுக ) : 48,306, மருதுகணேஷ் ( திமுக ): 24,651, கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) : 3,860, கரு நாகராஜன் ( பாஜக ) : 1,417 வாக்குகளை பெற்றனர். இதில் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், நோட்டாவுக்கு விழுந்த 2373 வாக்குகளைவிட குறைவாக பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை
இதன் மூலம் தமிழகத்தில் இடைத்தேர்தலில் முதல் முறையாக சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் தினகரன். எக்ஸிட் போலில் வெளியான தகவல்படியே தினகரன் வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றியால் தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications